காவிரி நதியின் உபநதியான வெருவளை வாய்க்கால் புனிதமான சக்தி தீர்த்தமாக அழைக்கப்படுகிறது. இது சமயபுரம் கோயிலின் தெற்கு தேரோடும் வீதியின் தென்புறத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் அருகே அதாவது பணித்துறையில் சுப்பிரமணியர் கோயில் அமைந்துள்ளது.
சர்வேஸ்வரன் தீர்த்தம்
சமயபுரம் கோயிலின் வடமேற்கு உள்ள வாயு மூலையில் இந்த தீர்த்த குளம் அமைந்துள்ளது. சப்த கன்னிகள் ஒவ்வொரு மகாமக திருநாளில் முன்பும் கங்காதேவியை இந்த தீர்த்தத்தில் ஆவாகனம் செய்துவிட்டு அங்கிருந்து பெருக்கெடுத்து ஓடும் புனித நீரைக் கும்பகோணம் மகாமக குளத்தில் சேர்ப்பதாக ஐதீகம்.
மகமாயி தீர்த்தம்
இந்த தீர்த்தம் கோயிலின் வடமேற்கு திசையில் அமைந்துள்ளது. விஜயநகர பேரரசு காலத்தில் கோயில் திருப்பணிகள் செய்யும்போது இந்த குளம் வடிவமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. நான்கு புறங்களிலும் நுழைவுப் பாதை படிகளுடன் அமைக்கப்பட்டு நடுவே அழகிய கோபுரத்துடன் சிறு மண்டபத்துடன் காணப்படுகிறது.
கங்கை தீர்த்தம்
காட்டிலும் நாட்டிலும் ஆறு மாதம் வாழ்ந்து கொண்டிருந்த விக்கிரமாதித்தன், தனது இஷ்ட தெய்வமான காளிக்குப் பூஜை செய்யக் கங்கா தேவி வரம் அளித்த தீர்த்தம் தான் இந்த வற்றாத கங்கை தீர்த்தம் ஆகும்.
ஜடாயு தீர்த்தம்
ராவணன் சீதையைக் கடத்திச் சென்ற தகவலை ராமனிடம் கூறுவதற்காக மகேஷ்வரனிடம் உயிர் பிழைக்க ஜடாயு வேண்டிப் பெற்ற தீர்த்தம் தான் இந்த ஜடாயு தீர்த்தமாகும்.