இது என்ன புது கதை.. 3 நாட்கள் ஏடிஎம்கள் மூடப்படுகிறதா.. மத்திய அரசு விளக்கம்!
By Pandeeswari Gurusamy May 09, 2025
Hindustan Times Tamil
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது.
அதன் படி, முக்கிய பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் 31க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத்தாக்குதல்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் கூறியிருந்த நிலையில், இந்தியாவின் மீது பாகிஸ்தான் பல்வேறு தாக்குதல்களை தொடுத்து வருகிறது.
அதன் படி நேற்றைய தினம் இரவு ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் உள்ளிட்ட பல இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல்களை நடத்தியது. ஆனால், இந்தத்தாக்குதல்கள் அனைத்தும் இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, 3 நாட்களுக்கு ஏடிஎம் மையங்கள் இயங்காது என தகவல்கள் பரவியது. இதனால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பாகிஸ்தான் ரான்சம்வேர் என்ற வைரஸ் மூலம் சைபர் தாக்குதல் நடத்துவதால் 2-3 நாட்களுக்கு ஏடிஎம் மையங்கள் மூடப்பட வாய்ப்புள்ளதாக வாட்ஸ் அப் தகவல்கள் பரவியது.
மேலும், ஆன்லைன் வாயிலாக எந்தப் பரிவர்த்தனையையும் செய்ய வேண்டாம். DANCE OF THE HILLARY என்ற பெயரில் வாட்ஸ்ஆப்பில் வரும் வீடியோவை திறக்க வேண்டாம் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 3 நாட்களுக்கு ஏடிஎம் மையங்கள் செயல்படாது என்று பரவிய தகவல் பொய்யானது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்க சமையல் மணம் அண்டை வீட்டாரையும் சுண்டி இழுக்க வேண்டுமா.. சூப்பர் டிப்ஸ் இதோ!