Actress Gowthami: நடிகை கெளதமி, தன்னுடைய வாழ்க்கையில் ரிலேஷன்ஷிப்பில் கற்றுக்கொண்ட பெரிய பாடத்தை எஸ்.எஸ். மியூசிக் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.
By Kalyani Pandiyan S May 22, 2024
Hindustan Times Tamil
இது குறித்து அவர் பேசும் போது, “உண்மையில் உங்களுடைய பலம் வேறு யாரோ கிடையாது. நீங்கள்தான் உங்களுடைய பலம். நீங்கள் மிகவும் சோகமாக இருக்கும் பொழுது, உங்களுக்கு பிடித்தமானவர் அல்லது உங்களை மோட்டிவேட் செய்ய கூடியவரின் வீடியோக்களை பார்ப்பீர்கள். இது நபருக்கு நபர் மாறுபடும். ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு விதமான விஷயங்கள் உத்வேகத்தைத் தரும். அவர்கள் அந்த விஷயத்தை நோக்கி செல்வார்கள்.
ஆனால் உண்மையில் அது உங்களுடைய பலம் கிடையாது. நீங்கள் தான் உங்களுடைய பலம். நீங்கள் ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்து, அந்த ரிலேஷன்ஷிப் சரிவர ஒர்க் அவுட் ஆகவில்லை என்றால், அதற்கு நீங்கள் அதற்கு முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அப்பா, அம்மா, மகள், கணவர் காதலர் என எந்த விதமான ரிலேஷன்ஷிப் ஆக இருந்தாலும் சரி, அந்த ரிலேஷன்ஷிப்பில் இருவருக்கும் இடையே, ஒரு மையப் புள்ளி ஆனது கண்டிப்பாக இருக்கும்.
அந்த மைய புள்ளி வரை இருவரும் வந்து, நீ பாதி வேலையைச் செய், நான் பாதி வேலையை செய்கிறேன் என்று இருக்க வேண்டும். ஆனால் சில பேருக்கு, ஏதோ ஒரு காரணத்தால் அந்த மையப் புள்ளிக்கும், அவருக்கும் இடையிலான இடைவெளி அதிகமாக இருக்கும். இங்கு நடக்கக்கூடிய தவறு என்னவென்றால், இன்னொரு பக்கம் இருக்கக்கூடிய அந்த நபர் ஐயோ… நீ அவ்வளவு தூரம்தான் கடந்து வந்திருக்கிறாயா என்று சொல்லி, அவர்களுக்காக இவர்கள், மையப்புள்ளியில் இருந்து இன்னும் கொஞ்சம் தூரத்தை கடந்து அவர்கள் பக்கம் வருவார்கள்.
அப்படி செய்யும் போது, நாம் அதை அவர்களுக்கு பழக்கப்படுத்தி விடுகிறோம். அந்த சமயத்தில் அந்தப் பக்கத்தில் இருக்கும் நபர், நமக்காக அவர் இவ்வளவு தூரம் வந்திருக்கிறாரே, நமக்காக இவ்வளவு மெனக்கெடுக்கிறாரே என்று சொல்லி சந்தோஷப்படுவார்கள். ஆனால், மெனக்கெட்டவர் இரண்டாவது முறையும் அப்படியே மெனக்கெடுவார். மூன்றாவது முறையும் அப்படியே மெனக்கிடுவார். காலப்போக்கில் அது அவர்களுக்கு பழக்கம் ஆகிவிடுகிறது.
அப்படி இருக்கும் பொழுது, அந்த இன்னொரு நபர், நான் ஏன் உனக்காக அவ்வளவு தூரம் வரவேண்டும்; நீ எனக்காக இங்கு இன்னும் கொஞ்சம் தூரம் வா என்று சொல்லி, மொத்த வேலையையும் நம்மீது கட்டிவிடுவார்கள். இதை நான் என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பாடமாக கற்று இருக்கிறேன். ஆகையால், அது எந்தவித ரிலேஷன்ஷிப்பாக இருந்தாலும் சரி நீங்கள் அந்த மையப் புள்ளியை தாண்டக்கூடாது.
இருவருக்கும் இடையேயான அன்பு, அர்ப்பணிப்பு உள்ளிட்டவை சமமாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த உறவு நீண்ட நாட்கள் நீடிக்கும். நீங்கள் 50 சதவீதத்தை கடக்கும் பொழுது, உங்களுக்கும் அதை செய்து பழக்கமாகிவிடும். எதிர் தரப்புக்கும் வாங்கி பழக்கமாகிவிடும். அது நல்லதல்ல” என்று பேசினார்.
இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே.. ஆண்களே உங்களுக்கான சூப்பர் டிப்ஸ் இதோ!