கேரள மாலில் காற்றுகூட புகாத அளவில் மக்கள் கூட்டம்! திரைப்பட நிகழ்ச்சி ரத்து
திரைப்படம் ஒன்றின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கேரளா மாநிலம் கோழிக்கூடு நகரிலுள்ள பிரபமான மால் ஒன்றில் மூச்சு விடக்கூட இடம் இல்லாத அளவில் ரசிகர்கள் குவிந்தனர். அந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் மாலில் குவிந்த கூட்டமும், நத்தைபோல் அவர் நகர்ந்த விடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதைப்பார்த்த பலரும், இந்த கூட்டத்தின் காரணமாக அவசர நிலை ஏதும் ஏற்பட்டால் நிலைமை மிகவும் மோசமாகிவிடும் என சுட்டிக்காட்டினர். மலையாள இயக்குநர் காலித் ரஹ்மான் இயக்கத்தில் வெளியாக இருக்கும் தள்ளுமாலா என்ற புதிய படத்தின் புரொமோஷனுக்கு வரும் நடிகர் நடிகைகளை பார்ப்பதற்கு ரசிகர்கள் இப்படி கட்டுக்கடங்காத விதமாக குவிந்தனர். கோழிக்கூடு நகரிலுள்ள HiLITE மாலில் இந்த சம்பவம் நிகழ்ந்த நிலையில், அதிக அளவில் குவிந்த கூட்டம் காரணமாக திரைப்பட புரொமோஷன் நிகழ்ச்சியை ஏற்பாட்டாளர்கள் ரத்து செய்தனர். மாலில் ஒவ்வொரு இன்ச்களிலும், எங்கு பார்த்தாலும் மனிதர்களின் தலைகளாகவே தெரிந்தன. தள்ளுமாலா படத்தில் டோவினோ தாமஸ், கல்யாணி பிரியதர்ஷன் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்தப் படம் நாளை வெளியாகிறது. கடந்த மாதம் இதேபோன்றுதொரு நிலைமை கொச்சியிலுள்ள லூலூ மாலில் நிகழ்ந்தது. 50 சதவீதம் நள்ளிரவு சலுகை விற்பனை என்ற அறிவிப்பையொட்டி அதிக அளவில் கூட்டம் குவிந்தது.