India Air Force:இந்திய விமானப்படை போர் பிரிவின் முதல் பெண் தளபதியான ஷாலிசா தாமி
- இந்திய விமானப்படையில் உள்ள குரூப் கேப்டனான ஷாலிசா தாமி என்பவர் மேற்கு செக்டார் பகுதி முன்னணி போர் பிரிவின் தலைமை பொறுப்பை ஏற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2003ஆம் ஆண்டில் ஹெலிகாப்டர் பைலாட்டாக நியமிக்கப்பட்டார் தாமி. சுமார் 2800 மணி நேரம் ஆகாயத்தில் பறந்த அனுபவம் பெற்றுள்ள இவர், தகுதி பெற்ற பயிற்சியாளராகவும் உள்ளார். மேற்கு செக்டார் பகுதியில் ஹெலிகாப்டர் பிரிவின் விமான தளபதியாக பொறுப்பு வகித்த இவர், தற்போது இந்திய விமானப்படை போர் பிரிவின் முதல் பெண் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் முதன்மை போர் பிரிவை தலைமை தாங்கும் முதல் பெண் அலுவலர் என்ற பெருமையை பெறுகிறார். இந்திய ராணுவத்தில் கர்னல் பதவிக்கு இணையானதாக விமானப்படையில் குரூப் கேப்டன் பதவி உள்ளது. இந்த வார தொடக்கத்தில் விமான படையை சேர்ந்த பல பெண் அலுவலர்களுக்கு போர் பிரிவின் உயர் பதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் உலகின் மிகவும் உயரமான போர்க்களமான சியாச்சின் பனிமலை பகுதியில் கேப்டன் ஷிவா செளகான் என்ற பெண் அலுவலர் தலைமையில் போர்குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. அந்த வகையில் முப்படைகளிலும் பாலின சமத்துவத்தை உறுதிசெய்யும் விதமாக பெண் அலுவலர்கள் பலருக்கும் போர் பிரிவுகளில் முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.