Viral Video: பீட்சா மாவு மீது தொங்கவிடப்பட்ட மாஃப் - விளக்கம் அளித்த டோமினோஸ்
பெங்களூருவில் உள்ள டோமினோஸ் உணவகம் ஒன்றில் பீட்சா மாவின் தட்டுகளுக்கு மேல் தரையை துடைக்க உதவும் மாஃப், ஒட்டடை அடிக்கும் ஒட்டடைகுச்சி, கழிப்பறையை சுத்தம் செய்யும் பிரஷ் உள்ளிட்டவை தொங்கவிடப்பட்ட நிலையில் இருக்கும் புகைப்படங்களை துஷார் என்பவர் சமீபத்தில் டுவிட்டரில் பகிர்ந்திருந்தார். இதை பார்த்த பீட்சா பிரியர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். டோமினோஸின் சுகாதாரமற்ற சமையலறை குறித்து நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர். அரசு அதிகாரிகள் உணவகத்தை சோதனையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து டோமினோஸ் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. "உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்து டோமினோஸ் பீட்சாக்கள் தயாரிக்கப்படுகின்றன. எங்கள் கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட இந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தரம் மற்றும் தூய்மை விஷயத்தில் வாடிக்கையாளர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்தையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.