Savukku Shankar arrest: ’சவுக்கு சங்கர் மீண்டும் கைது!’ என்ன காரணம் தெரியுமா?
சவுக்கு சங்கர் கஞ்சா வழக்கில் ஆஜராகாமல் இருந்த நிலையில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால் தேனி காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.
சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து உள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளார். கஞ்சா வழக்கில் ஆஜராகாமல் இருந்த நிலையில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால் தேனி காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.
கடந்த மே மாதத்தில் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்த சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் கஞ்சா பயன்படுத்தியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கஞ்சா வைத்திருந்த வழக்கில் நீதிமன்றம் விசாரணைக்கு ஆஜராக கூறிய நிலையில் அவர் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. சிறப்பு நீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து உள்ள நிலையில் சவுக்கு சங்கரை தேனி போலீசார் கைது செய்து சென்னையில் விசாரணை செய்து வருகின்றது.
ரங்கராஜன் நரசிம்மன் ஆடியோ காரணமா?
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தனது யூடியூப் சேனலில் ஆடியோ ஒன்றை வெளியிட்ட நிலையில் ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். ரங்கராஜன் நரசிம்மன் வெளியிட்ட ஆடியோ பதிவை நேற்றைய தினம் சவுக்கு சங்கரும் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு விவாதம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
சவுக்கு சங்கர் மீதான வழக்குகளின் பின்னணி
யூடியூபரும், பத்திரிக்கையாளருமான சவுக்கு சங்கர், ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலில் அதன் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு அளித்த பேட்டியில், “காவல்துறையில் பணியாற்றும் பெண்காவலர்கள்” குறித்து பேசிய கருத்து சர்ச்சை ஆனதால் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தேனியில் கைது செய்யப்பட்டார்.
சவுக்கு சங்கர் மீது பதியப்பட்ட கஞ்சா வழக்கு, பெண் காவலர்களை ஆபாசமாக பேசிய வழக்கு, மோசடி வழக்கு உள்ளிட்ட 5 வழக்குகள் பதியப்பட்ட நிலையில் அவர் மீது இரண்டு முறை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதற்கு எதிராக அவரது தாயார் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. பிற வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்ததால் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி அன்று சவுக்கு சங்கர் விடுதலை செய்யப்பட்டு இருந்தார்.
டாபிக்ஸ்