‘எங்கே செல்லும் இந்த பாதை..’ அரசியல் வாதியாக செந்தில் பாலாஜியின் பயணமும் நிறுத்தமும்!
அதிமுக ஆட்சியில் இன்றைய திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினால் நேரடியாக விமர்சிக்கப்பட்டவர். அதன் பின் திமுகவிற்கு வந்த பின், பாஜகவால் நேரடியாக குறிவைக்கப்பட்டவர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கை பல்வேறு ஏற்ற இறக்கங்களைக் கொண்டது. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் மதிமுக, அதிமுக, அமமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளில் பணியாற்றியுள்ளார். அதிமுக ஆட்சியில் இன்றைய திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினால் நேரடியாக விமர்சிக்கப்பட்டவர். அதன் பின் திமுகவிற்கு வந்த பின், பாஜகவால் நேரடியாக குறிவைக்கப்பட்டவர். தற்போதைய திமுக ஆட்சியில் அவர் அமைச்சர் பொறுப்பில் இருந்ததை விட, அதிக அளவில் விசாரணை நாட்களிலும், சிறையிலும் இருந்துள்ளார். இதோ செந்தில் பாலாஜியின் அரசியல் பயணமும், அவர் சந்தித்த தடைகளும் இதோ:
- 2006 ஆம் ஆண்டு கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு முதன்முறையாக எம்எல்ஏ ஆனார்.
- 2011 ஆம் ஆண்டு மீண்டும் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பணியாற்றினார்.
- 2015-ம் ஆண்டு அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
- ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, டிடிவி தினகரன் அணியில் இருந்து செந்தில் பாலாஜியின் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டது.
- பிறகு திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி, 2019-ம் ஆண்டு அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்.
- 2021-ம் ஆண்டு கரூர் தொகுதியில் வெற்றி பெற்று, திமுக ஆட்சியில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சரானார்.
- 2023 ஜூன் 14-ம் தேதி சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
- நீண்ட சட்ட போராட்டங்களுக்குப் பிறகு, 2024 செப்டம்பர் 26 அன்று உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
- ஜாமினில் வந்த மறுநாளே மீண்டும் அவர் முன்பு வகித்த துறைகளின் அமைச்சராக பொறுப்பேற்றார்
- அவர் மீண்டும் அமைச்சரானதால், முந்தைய வழக்கின் சாட்சிகள் மிரட்டப்படுவார்கள், அதனால் விசாரணை பாதிக்கப்படும் என வித்யா குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார்
- செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மறைமுகமாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் வைத்த கோரிக்கைகளை அவர் ஏற்கவில்லை. இறுதியாக, அவருக்கு கடுமையான உத்தரவை பிறப்பித்தனர்.
- இதைத் தொடர்ந்து ஏப்ரல் 27, 2025 அன்று தன்னுடைய அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார் செந்தில் பாலாஜி.
மேலும் படிக்க | ‘எடப்பாடி பழனிசாமியா? ஸ்டாலினா? என்பது தான் 2026 தேர்தல் களம்’ எஸ்.பி.வேலுமணி பேச்சு!
அமைச்சர் பொறுப்பை அவர் ராஜினாமா செய்திருந்தாலும், முதல்வரின் நம்பிக்கையை பெற்றவராக இருப்பதால், கட்சியின் முக்கிய பொறுப்புகளை அவர் தொடர்வார். இருப்பினும் அமைச்சர் என்கிற அந்தஸ்து இல்லாதது, அவருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

டாபிக்ஸ்