‘பாமக இருக்கும் கூட்டணியில் இருக்கமாட்டோம்’ திமுகவுக்கு நேரடி செய்தி அனுப்பிய திருமாவின் பேச்சு!
‘நான் கூட்டணிக்காக எல்லா கதவுகளையும் திறந்து வைத்திருக்கவில்லை. பாஜக, அதிமுகவோடும் தேவைப்பட்டால் மற்ற கட்சிகளோடு கூட்டணிக்காக ஒரே நேரத்தில் இரண்டு அணியிலும் பேசிக்கொண்டே இருக்கிற ராஜதந்திரம் எனக்குத் தெரியாது’

திமுக உடன் பாமக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் பரவி வரும் நிலையில், ‘பாமக மற்றும் பாஜக இடம் பெறும் கூட்டணியில் தான் இடம் பெறமாட்டேன்’ என புதுச்சேரியில் திருமாவளவன் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
புதுச்சேரி அடுத்த திருபுவனையில் புதிதாக அமைக்கப்பட்ட அம்பேத்கரின் முழு திருவுருவ சிலை திறப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றியவர்களுக்கு விருதுகள் மற்றும் பரிசுகளை வழங்கி கௌரவித்த பின், அவர் பேசியதாவது:
ஜாதி ஒழிக என்று கூறியதுண்டா?
‘‘கிராமங்கள் தோறும் அம்பேத்கர் சிலைகள் அமைப்பதை விட அவர் பெயரில் ஒரு படிப்பகத்தை கட்டி எழுப்ப வேண்டும், அதுதான் அடுத்த தலைமுறைக்கு செய்யக்கூடிய பெரும் செயல். மாணவர்களுக்கு படிக்கின்ற பழக்கத்தை உருவாக்க வேண்டும் படிப்பது என்பது ஒரு கலை.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சியாக பாரதிய ஜனதா இருந்தது, சாதி ஒழிப்பு, சகோதரத்துவம், சமத்துவம், இட ஒதுக்கீட்டை , வெளிப்படையாக ஆதரிக்காத கட்சி ஒன்று இந்தியாவில் உண்டு என்றால் அது பிஜேபி தான். மற்ற கட்சிகள் போலியாக பேசுகிறார்கள், நடைமுறையில் இருக்கிறதோ இல்லையோ ஆனால் பேசுகிறார்கள். ஆனால் பாரதிய ஜனதா என்றைக்காவது சாதி ஒழிக என்று சொன்னது உண்டா? பெண்களுக்கான சமத்துவத்தை பெண்களுக்கான உரிமைகளை முன்னிறுத்தி உயர்த்தி பேசியது உண்டா? சாதி வழக்கத்தை எதிர்த்து ஆர்எஸ்எஸ் இயக்கம் என்றைக்காவது போராடியது உண்டா?
என்ன பாதிப்பு வந்தாலும் ‘ஐ டோண்ட் கேர்’
தமிழகத்தின் நடைபெற்ற வேங்கை வயல், கள்ளக்குறிச்சி,மேல் பாதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளாக இருந்தாலும் திமுக அரசின் தமிழக காவல் துறையை கண்டித்து பல போராட்டங்களை நடத்தி உள்ளோம். அப்போது எல்லாம் அதிமுக போராட்டங்களை நடத்த வேண்டியது தானே? திமுகவோடு தொடர்ந்து நாம் பயணிக்கிறோம் என்பதையே பலர் கேலி பேசுகிறார்கள்.
நான் கூட்டணிக்காக எல்லா கதவுகளையும் திறந்து வைத்திருக்கவில்லை. பாஜக, அதிமுகவோடும் தேவைப்பட்டால் மற்ற கட்சிகளோடு கூட்டணிக்காக ஒரே நேரத்தில் இரண்டு அணியிலும் பேசிக்கொண்டே இருக்கிற ராஜதந்திரம் எனக்குத் தெரியாது. பாமக மற்றும் பாஜக உடன் ஒரு போதும் சேர மாட்டோம், அந்த கட்சிகள் இருக்கும் கூட்டணியிலும் சேர மாட்டோம். அதனால் எந்த பாதிப்பு வந்தாலும், ‘ஐ டோண்ட் கேர்’, அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. எனக்கு பதவி தான் முக்கியம் என்றால், இப்படி பேச முடியுமா?
விஜய் விழாவை ஏன் புறக்கணித்தேன்
புதிதாக கட்சி தொடங்கி இருக்கிற நடிகர் விஜய் கூட புத்தக வெளியீட்டு விழாவிற்கு வரும்படி அழைப்பு விடுத்த போது, அது ஒரு தவறான யூகத்தை கொடுத்து விடக்கூடாது நாம் இருக்கிற அணியில் தொடர வேண்டும், அப்படி ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி விடக்கூடாது, அதன் மூலம் நாம் இருக்கிற அணி பலவீனப்பட்டால் பாரதிய ஜனதாவுக்கு சாதகமாக அரசியல் சூழல் மாறிவிடும் என்பதையெல்லாம் யூகித்து அந்த விழாவையே புறக்கணித்தேன்.
எனக்காக திறந்து வைக்கப்பட்டிருந்த அதிமுக கதவை மூடியது போன்று, விஜய் திறந்து வைத்திருந்த கதவையும் மூடினேன். ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி, இன்னும் சிலருக்கு அமைச்சர் பதவி என்றெல்லாம் அதிமுக கூட்டணிக்காக என்னிடம் சிலர் பேசினார்கள். ஆனால், ஆசை வார்த்தைகளால் என்னை வீழ்த்தி விட முடியாது. அரசியலில் தான் எடுக்கிற முடிவு ஒவ்வொன்றும், அம்பேத்கரை மனதில் வைத்து எடுக்கும் முடிவாகும்,’’
என்று அப்போது திருமாவளவன் பேசினார்.
