EPS VS OPS: ’நாங்கதான் ஒரிஜினல் அதிமுக; முடிஞ்சா வழக்கு போடு’ வரிந்து கட்டும் வைத்தியலிங்கம்!
”திருச்சி மாநாட்டிற்கு அதிமுக மாநாடு என்ற பெயரில்தான் தொண்டர்களை அழைப்போம். கொடி, சின்னம் அனைத்தையும் பயன்படுத்துவோம், அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை”
அதிமுக கொடியை ஒ.பன்னீர் செல்வம் தரப்பு பயன்படுத்த கூடாது என்று எடப்பாடி பழனிசாமி பேசி இருந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ வைத்தியலிங்கம் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், எந்த கிரிமினல் வழக்கு போட்டாலும் சந்திக்க தயார், புரட்சித் தலைவர் ஏற்படுத்திய கொடி யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது நாளை வழக்கு எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.
ட்ரெண்டிங் செய்திகள்
இப்போது எடப்பாடிக்கு சொந்தம் என்று எதுவுமில்லை; நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றே சொல்லி உள்ளார்கள்.
கேள்வி:- அதிமுக கொடியில் ஏன் மாறுதல் செய்தீர்கள்?
அதிமுக சின்னம் இரட்டை இலை, கொடியில் இரட்டை இலை உள்ளது. அதில் என்ன தப்பு
கேள்வி:- சட்ட சிக்கலில் இருந்து தப்பிக்க கொடியில் மாற்றமா?
அதிமுக கொடியில் இரட்டை இலை சின்னம் எப்போதும் இருக்கும், இதில் விருப்பபடுபவர்கள் வைப்பார்கள். சட்ட சிக்கல்களில் இருந்து தப்பிப்பதற்காக செய்ய நாங்கள் குற்றவாளிகள் அல்ல.
இரட்டை இலை சின்னம் இன்னும் நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று தேர்தல் ஆணையம் சொல்லி உள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இன்னும் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்க் நிரந்தரமாக உறுதியாகவில்லை.
திருச்சி மாநாட்டிற்கு அதிமுக மாநாடு என்ற பெயரில்தான் தொண்டர்களை அழைப்போம். கொடி, சின்னம் அனைத்தையும் பயன்படுத்துவோம், அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இல்லை என்று தேர்தல் ஆணையம் சொல்லி உள்ளார்களா? இந்த கொடியை, சின்னத்தை பயன்படுத்துவோம் முடிந்தால் வழக்கு போடுங்கள் வழக்கை சந்திக்க தயார். தமிழ்நாட்டில் இதுமட்டுமின்றி இன்னும் பல மாநாடுகளை நடத்துவோம்.
நாங்கள்தான் ஒரிஜினல் அதிமுக; எடப்பாடி வேண்டுமனால் இரண்டாவது அதிமுகவாக வைத்துக் கொள்ளலாம்.