விருதுநகர்: குண்டாறு-தெற்காறு இணையும் இடத்தில் தடுப்பணை கோரி முதல்வருக்கு விவசாயிகள் மனு!
”தடுப்பணை அமைப்பதால் 15,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுவதுடன், குடிநீர் ஆதாரமும், நிலத்தடி நீர் மட்டமும் மேம்படும்”

குண்டாறு-தெற்காறு இணையும் இடத்தில் தடுப்பணை கோரி விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் முதலமைச்சரின் தனிபிரிவுக்கு கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், P.புதுப்பட்டி கிராமத்தில் குண்டாறு மற்றும் தெற்காறு இணையும் இடத்தில் புதிய தடுப்பணை அமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் 30 ஆண்டு கால கோரிக்கையை முன்வைத்து, காவிரி-வைகை-கிருதுமால்-குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு, தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளது. இந்த மனுவில், தடுப்பணை அமைப்பதால் 15,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுவதுடன், குடிநீர் ஆதாரமும், நிலத்தடி நீர் மட்டமும் மேம்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கையின் பின்னணி
விருதுநகர் மாவட்டத்தில், குண்டாறு மற்றும் தெற்காறு ஆறுகள் P.புதுப்பட்டி கிராமத்தில் இணைகின்றன. இந்த இடத்தில் தடுப்பணை இல்லாததால், ஒவ்வொரு மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை குண்டாற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு வீணாகி, மன்னார் வளைகுடா கடலில் கலக்கிறது. இதனைத் தடுத்து, விவசாய மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய தடுப்பணை அமைக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கடந்த 30 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
காவிரி-வைகை-கிருதுமால்-குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் எம்.அர்ச்சுணன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிய மனுவில், மறைந்த முன்னாள் அமைச்சர் வே.தங்கப்பாண்டியன், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் ஆட்சியின்போது இதற்காக பெரும் முயற்சிகள் மேற்கொண்டதை சுட்டிக்காட்டினார். இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற, உரிய நிதி ஒதுக்கி, தடுப்பணை அமைப்பதுடன், நீர் வரத்து கால்வாய்களை சீரமைக்கவும் முதலமைச்சர் தலையிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
தடுப்பணையின் பயன்கள்
P.புதுப்பட்டி கிராமத்தில் குண்டாறு-தெற்காறு இணையும் இடத்தில் தடுப்பணை அமைப்பதன் மூலம், புதுப்பட்டி, பனிக்குறிப்பு, சொக்கம்பட்டி, கல்லாம்பரம்பு, முருகையாபுரம், குச்சம்பட்டி புதூர், உடையணம்பட்டி, நொச்சிகுளம், ஶ்ரீ ராமனேந்தல், வாலில்லாப்பேரி, சென்னிலைக்குடி, மயிலி, கேத்தநாயக்கன்பட்டி, கடல் பாச்சி, அம்பநேரி, சூச்சநேரி, காரேந்தல், நாடாகுளம், கொக்குளம், செம்பொன், நெருஞ்சி, நெல்லிக்குளம், ஆனைக்குளம், அன்ன லெட்சுமிபுரம் ஆகிய 23 கிராமங்களில் உள்ள சுமார் 15,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இந்தத் தடுப்பணை, விவசாயத்திற்கு மட்டுமல்லாமல், குடிநீர் ஆதாரத்தை மேம்படுத்துவதுடன், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கும் உதவும். இதனால், இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் கணிசமாக மேம்படும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
ஆய்வு மற்றும் பங்கேற்பு
மே 5, 2025 அன்று காலை, P.புதுப்பட்டியில் குண்டாறு-தெற்காறு இணையும் இடத்தில் இருந்து சென்னிலைக்குடி வரையிலான கண்மாய்கள், குளங்கள் மற்றும் கால்வாய்களை, காவிரி-வைகை-கிருதுமால்-குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு நேரில் ஆய்வு செய்தது. இந்த ஆய்வில், மாநில பொதுச்செயலாளர் எம்.அர்ச்சுணன், விருதுநகர் மாவட்டச் செயலாளர் ஆறு.கோபாலகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் ரா.ராம்பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் சி.மகாலிங்கம் (விடத்தக்குளம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்), மு.ஜெயமுருகன் (உடையணம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்), ச.குருசாமி (சென்னிலைக்குடை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்), கே.ராமசாமி (பண்ணை மூன்றடைப்பு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்), பொ.கோபால் (கேத்தநாயக்கன்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்), மற்றும் சென்னிலைக்குடி நாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
