மேல்பாதி கோயில் சர்ச்சை: பட்டியலின மக்கள் வழிபாட்டுக்கு திறக்கப்பட்ட மேல்பாதி கோயில் மீண்டும் மூடல்! உச்சகட்ட பரபரப்பு!
2023 ஏப்ரல் மாதம் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கோயில் பூட்டப்பட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவை அடுத்து, 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புடன் கோயில் திறக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவுப்படி பட்டியலின மக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்ட மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் மீண்டும் மூடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி இன்று திறக்கப்பட்ட நிலையில், இரு மணி நேரத்தில் மீண்டும் மூடப்பட்டது. 2023 ஏப்ரல் மாதம் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கோயில் பூட்டப்பட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவை அடுத்து, 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புடன் கோயில் திறக்கப்பட்டது.
ஆனால், ஒரு தரப்பினர் வழிபாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், சமரச முயற்சிகள் தோல்வியடைந்து கோயில் மூடப்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மூன்று மாவட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, வெளியூர் வாகனங்களை சோதனை செய்து அனுமதிக்கின்றனர். பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. உயர்நீதிமன்ற உத்தரவு இருந்தபோதிலும், ஒத்துழைப்பு இல்லாததால் கோயில் மூடப்பட்டுள்ளது.
மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் பிரச்னை
விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயிலில் பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் இரு சமூகங்களுக்கு இடையே பதற்றம் உருவானதால் பொது அமைதியைப் பாதுகாக்கும் நோக்கில், அரசு அதிகாரிகள் கோயிலுக்கு சீல் வைத்து மூடினர். இது, பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டதாக புகார்களை எழுப்பியது.
கோயில் மூடப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அனைவருக்கும் சமமான வழிபாட்டு உரிமை உறுதி செய்யப்பட வேண்டும் என வாதிடப்பட்டது
கடந்த ஆண்டு மார்ச் மாதம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கோயிலை உடனடியாக திறக்க உத்தரவிட்டார். 2024 ஏப்ரல் 22 முதல் தினமும் இரு வேளை பூஜைகள் நடத்தப்பட வேண்டும் என்றும், பொதுமக்கள் அனைவரும் தடையின்றி வழிபட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
கோயில் மீண்டும் திறப்பு
கடந்த ஆண்டு மார்ச் 22ஆம் தேதி அன்று நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் வகையில், 9 மாதங்களுக்குப் பிறகு கோயிலின் சீல் அகற்றப்பட்டு, அதிகாரிகள் மற்றும் காவல்துறை முன்னிலையில் கோயில் திறக்கப்பட்டது. முதல் நாள் முதல், மறு உத்தரவு வரும் வரை ஒரு வேளை பூஜை நடத்த அனுமதிக்கப்பட்டது. ஆனால், இந்தத் திறப்பு நீண்ட காலம் நீடிக்கவில்லை. பட்டியலின மக்கள் கோயிலுக்குள் வழிபட அனுமதிக்கப்படவில்லை என்ற புகார்கள் மீண்டும் எழுந்தன.
மீண்டும் நீதிமன்ற உத்தரவு
கடந்த பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றம் மற்றொரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. பட்டியலின பக்தர்கள் கோயிலுக்குள் வழிபடுவதை யாரேனும் தடுத்தால், காவல்துறை உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு, வழிபாட்டு உரிமையை உறுதி செய்யும் முயற்சியாக பார்க்கப்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் எச்சரிக்கை
கடந்த மார்ச் 29ஆம் தேதி அன்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வெளியிட்ட அறிக்கையில், கோயிலை பொதுமக்கள் வழிபாட்டுக்கு முழுமையாக திறக்காவிட்டால், ஆலய நுழைவு போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தார். மேலும் சீமான், அறநிலையத்துறையை விமர்சித்து, கோயிலை திறக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்கள் போராட்டம் நடத்தப்படும் என்று மீண்டும் அறிவித்தார்.
கோயில் திறப்பு
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் வகையில், திரௌபதி அம்மன் கோயில் மீண்டும் திறக்கப்பட்டது. 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். பட்டியலின மக்கள் கோயிலுக்குள் வழிபட அனுமதிக்கப்பட்டு, மகிழ்ச்சி தெரிவித்தனர். ஆனால், இரு மணி நேரங்களுக்குள், ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் கோயில் மீண்டும் மூடப்பட்டது. காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம், மேல்பாதி கிராமத்தில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

டாபிக்ஸ்