ECR Incident: சென்னை ECR ல் நடந்த சம்பவம்.. "கட்சி கொடி கட்டியதாலேயே திமுக என ஆகிவிடுமா?".. திருமாவளவன் பரபரப்பு பேட்டி
ECR Incident, Thol.Thirumavalavan: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இளம் பெண்களை துரத்திய இளைஞர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ECR Incident, Thol.Thirumavalavan: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜனவரி 30) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வருவது தொடர்பாகவும், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்களை காரில் துரத்திய சம்பவம் தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த திருமாவளவன், "இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை ஒரு விளக்கம் அளித்துள்ளது. சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்கு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் காரில் கட்சிக் கொடி கட்டப்பட்டிருப்பதாலேயே அவர்கள் திமுகவினர் என்கிற முடிவுக்கு வந்துவிட முடியாது; அதற்கு அந்த கட்சி பொறுப்பாக முடியாது. யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.
நடந்தது என்ன?
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் திமுக கொடி கட்டிய சொகுசு காரில் வந்த இளைஞர்கள் சிலர், இளம்பெண்கள் சென்ற காரை விரட்டிச் சென்றாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கானத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இளம்பெண்களை காரில் துரத்திய இளைஞர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி கண்டனம்
சென்னை ஈசிஆரில் காரில் சென்ற பெண்களை சிலர் துரத்திச் சென்ற சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தும் வகையில், சினிமா காட்சிகளைக் காட்டிலும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்த முயன்ற காட்சி நெஞ்சை பதைக்க வைக்கிறது. அவர்களிடம் இருந்து தப்பித்த பெண்களை வீடு வரை துரத்தி வந்த கயவர்கள், வீட்டில் இருந்த உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் கூடியதால் அங்கிருந்து சென்றதாகவும், இது குறித்து புகாரளித்தால் "இரவு நேரத்தில் உங்களை யார் வெளியே போகச்சொன்னது" என்று காவல்துறையினர் கேட்டதாகவும் பாதிக்கப்பட்டோர் தரப்பில் கூறுகின்றனர்.
குற்றங்களை மேற்கொள்ள திமுக கொடி லைசென்சா?
பெண்கள் இரவு நேரத்தில் நடமாடும் சுதந்திர உரிமை கூட ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் பறிக்கப்பட்டிருக்கிறதா? பெண்களுக்கு எதிரான குற்றங்களை மேற்கொள்ள திமுக கொடி உள்ளிட்ட ஆளுங்கட்சி அடையாளம் என்பது லைசன்சா? குற்றம் செய்பவர்கள் திமுகவினர் என்றால் காவல்துறை ஆமை வேகத்தில், காலம் தாழ்ந்து தான் செயல்படுமா? #யார்_அந்த_SIR என்ற நீதிக்கான கேள்விக்கு எரிச்சல் அடைந்த திரு. ஸ்டாலின், இந்த SIR-கள் பற்றி என்ன சொல்லப் போகிறார்? மாநிலத்தின் பிரதான சாலையான ECR-ல், பெண்களை இப்படி கொடூரமாக வழிமறித்து தைரியமாக தாக்க முயலும் அளவிற்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை அடியோடு கெடுத்துள்ள இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
இந்த வழக்கில், நேர்மையாக FIR பதிந்து, பாதிக்கப்பட்டோர் விவரம் லீக் ஆகாததை உறுதிசெய்து, அரசியல் தலையீடு இல்லாமல் இக்குற்றத்தில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்