ஆதவ் அர்ஜூனாவை 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்து திருமாவளவன் அதிரடி.. விசிக நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார் என விமர்சனம்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ஆதவ் அர்ஜூனாவை 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்து திருமாவளவன் அதிரடி.. விசிக நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார் என விமர்சனம்

ஆதவ் அர்ஜூனாவை 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்து திருமாவளவன் அதிரடி.. விசிக நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார் என விமர்சனம்

Marimuthu M HT Tamil
Dec 09, 2024 12:09 PM IST

ஆதவ் அர்ஜூனாவை 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்து திருமாவளவன் அதிரடி.. கட்சியின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார் என விமர்சனம் எழுந்தநிலையில் நடவடிக்கை பாய்ந்துள்ளது.

ஆதவ் அர்ஜூனாவை 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்து திருமாவளவன் அதிரடி.. விசிக நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார் என விமர்சனம்
ஆதவ் அர்ஜூனாவை 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்து திருமாவளவன் அதிரடி.. விசிக நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார் என விமர்சனம்

தொல்.திருமாவளவன் ஆதவ் அர்ஜூனாவை சஸ்பெண்ட் செய்து வெளியிட்ட அறிக்கையில்,

‘’விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரிய வந்தது.

இது குறித்து கடந்த 07-12-2024 அன்று கட்சியின் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும்; அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால் கட்சியின் நலன் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும்; அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.

கட்டுக்கோப்பை சீர்குலைக்கும் - திருமா

இத்தகைய போக்குகள், கட்சிப்பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு "தவறான முன்மாதிரியாக" அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது.

இத்தகைய சூழலைக்கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், திரு.ஆதவ் அர்ஜூனா அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்'' என விசிக நிறுவனத்தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஆதவ் அர்ஜூனா மீது விமர்சனத்தை குவித்த அவரது சமீபத்திய பேச்சு:

சென்னையில் ’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் பேசிய ஆதவ் அர்ஜூனா, ’’5 வயதில் என்னுடைய தாயின் தற்கொலையை நான் பார்த்தவன். என் தாயின் அக்காவாக, என் பெரியம்மாவாக இருந்தவர் திலகவதி ஐபிஎஸ். அம்மாவும், என் பெரியம்மாவும் 11 பேர் கொண்ட ஒரு குடும்பத்தில் இருந்தபோது, சக தோழியாக வாழ்ந்தார்கள். என் அம்மா, காதல் திருமணம் செய்ய விரும்பினார். என் பாட்டி, சாதியைக் காட்டி மறுத்து, கட்டாய திருமணத்தை என் அம்மாவுக்கு செய்து வைத்தார்கள். பின்னர் ஏற்பட்ட வறட்சி, அதனால் வீட்டில் ஏற்பட்ட வன்முறை தான், என் தாய் தற்கொலை செய்ய காரணமானது. அன்று என் பெரியம்மா தான், எங்களை வளர்த்தார்.

மாவேயிஸ்ட் ஆக விரும்பினேன்: ஆதவ் அர்ஜூனா

என் தாயின் இறப்பு, தனிமை என்னை நூலகங்களை நோக்கி இழுத்துச் சென்றது. சின்ன வயதில், மாவேயிஸ்ட் ஆக வேண்டும், நக்சலைட் ஆகணும் என்று நினைத்தேன். அப்போது, என் பேராசிரியர்கள் எனக்கு அறிவுரை வழங்கினர். ‘இந்த சிஸ்டத்தை மாற்ற வேண்டுமென்றால், இந்த சிஸ்டத்தை நீ பழக வேண்டும்’ என்று கூறினர். அன்றிலிருந்து, இரு ஆராய்ச்சியை மேற்கொண்டேன். ஒன்று பெரியாரின் கொள்கை, மற்றொன்று புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கை.

பெரியாரின் கொள்கையை உள்வாங்கி, தேர்தல் அரசியலாக மாற்றினார் அண்ணா. அம்பேத்கர், அரசியலில் ஈடுபடவில்லை. ஒருவேளை அவருக்கு எம்.பி.க்கள் இருந்திருந்தால், அவர் நினைத்ததை அவர் செய்திருக்க முடியும். அந்த ஆராய்ச்சி என்னுடைய 15 வயதில் தொடங்கியது. மேடையில் திருமா இல்லை, அவருடைய மனசாட்சி இங்கு தான் இருக்கும் என்று எனக்கு தெரியும். காலச்சூழ்நிலை தலித் விலங்கை உடைக்கும்.

திருமாவின் கனவு - ஆதர் அர்ஜூனா

மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டது. மன்னர் பரம்பரையை ஒழிக்க, அம்பேத்கரின் சிந்தனை தேவைப்படுகிறது. திருமா அண்ணனின் கனவு என்ன? தலித் மட்டும் பேசிக் கொண்டிருந்த அம்பேத்கர் அவர்களை, தலித் அல்லாத விஜய் அவர்கள் வெளியிடுவது என்பது தான், புரட்சியாளர் அம்பேத்கரின் கனவு. திருமாவின் கனவு. இன்று அந்த கனவு ஈடேறியிருக்கிறது. விஜய்க்கு அரசியல் தெரியுமா, கொள்கை தெரியுமா என்று விஜய் மீது விமர்சனம் செய்கிறார்கள்.

கொள்கை பேசியர்வகள் ஏன் அம்பேத்கரை மேடை ஏற்றவில்லை? முதல்முறையாக அம்பேத்கரின் நினைவு நாளில், எல்லா அமைச்சர்களும் அம்பேத்கரை புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது தான் எங்களுக்கு கிடைத்த வெற்றி. தேர்தல் அரசியலை, எங்கிருந்து கற்று வந்திருக்கிறேன் என்று எல்லோருக்கும் தெரியும். 2026 தேர்தலுக்கான பணிகள், மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும்.

பிரசாந்த் கிஷோர் என்னிடம் இதைத்தான் சொன்னார் - ஆதவ் அர்ஜூனா:

பிறப்பால் அனைவரும் சமம் என்கிற கருத்தியலை அம்பேத்கர் உருவாக்கியது போல, பிறப்பால் ஒரு முதல்வர் உருவாகக் கூடாது. ஒரு கருத்தியல் தலைவர் தான் தமிழகத்தை ஆள வேண்டும். 2014ல் ஏன் பாஜக வெற்றி பெற்றது? பிரசாந்த கிஷோர் என்னிடம் சொன்னார், குடும்ப ஆட்சியை எதிர்த்து பிரசாரம் செய்ததால் தான், இன்று வரை பாஜக வலுவாக உள்ளது என்று.

தமிழ்நாட்டில் ஏன் அதை பேச மறுக்கிறோம்? ஊழல் என்கிற விசயத்தை தமிழகத்தில் நாம் கடந்து சென்று கொண்டிருக்கிறோம். மதம் பெரும்பான்மை வாதம் இங்கு இல்லை. பாஜகவுக்கு இங்கு 2 சதவீதத்திற்கு மேல் ஓட்டு இல்லை. தமிழகத்தில் ஒரு தலித்தை பொதுத் தொகுதியில் நிறுத்த முடியவில்லை. 1 கோடியே 40 லட்சம் தலித்துகள் இங்கு இருக்கிறார்கள். ஆனால், ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு என்றால், ‘சனாதனம் சனாதனம்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். விஜய் மட்டும் தான், ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்று முதலில் குரல் கொடுத்தவர்.

விஜய்க்கு ரூ.2ஆயிரம் கோடி பிஸினஸ் இருக்கு: ஆதவ் அர்ஜூனா

நெஞ்சுக்கு நேராக இனி பேசுவோம், முதுகுக்குப் பின் பேச வேண்டாம். சினிமாவில் 2 ஆயிரம் கோடி வியாபாரம் விஜய்க்கு இருக்கு. அதை விட ஒரு மனசு வேண்டும். ஆனால், இங்கோ சினிமாவை ஒரு தரப்பு வியாபாரமாக செய்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரம் வரும் சினிமாவை, ஒரு நிறுவனம் கட்டுப்படுத்துகிறது. இதை மக்கள் முன் சொல்ல வேண்டும்.

தமிழகத்தின் ஊழலை விஜய் எடுத்து பேச வேண்டும். மதவாதத்தை எடுத்து பேச வேண்டும். சாமியார்கள், போலி சாமியார்கள் இருவர் உண்டு. நல்ல சாமியார்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். போலி சாமியர்கள் தான் கவலைக்குரியவர்கள். எல்லாரும் சமம் என்பது தான் திராவிடம். தமிழ்த்தேசியம் என்றாலும் எல்லாரும் சமம் தான். பிரபாகரனும் அதைத் தான் சொல்கிறார்.

’திருமாவை தலித் பகுதிகளுக்கு மட்டுமே அழைத்துச் செல்கின்றனர்’:ஆதவ் அர்ஜூனா

இங்கு சாதியின் அடிப்படையில் உருவாக்கக் கூடிய தேர்தல் அரசியல் தான் பிரச்னை. திருமா உடன் தேர்தல் பிரசாரத்திற்கு போகும் போது, அவரை தலித் பகுதிகளுக்கு மட்டுமே அழைத்துச் செல்கின்றனர். பாஜக மதத்தை வைத்து செய்வதை, இங்கு ஜாதியை வைத்து செய்கிறார்கள். வேங்கை வயல் பிரச்னை இன்று வரை தீர்க்க முடியாததற்கு காரணம் போலீஸ் இல்லை. ஒரு கான்ஸ்டபிள் நினைத்தால் அதற்கு தீர்வு தந்து விட முடியும். சாதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட ஒரு எம்.எல்.ஏ., ஒரு அமைச்சர் தான் தீர்வு இல்லாததற்குக் காரணம். பாதிக்கப்பட்ட மக்களுக்காக இதை நான் பேசுகிறேன்.

எப்படி நீங்கள் பெரிய கட்சி?

25 சதவீதம் ஓட்டை வைத்துக் கொண்டு, எப்படி நீங்கள் பெரிய கட்சி என்கிறீர்கள்? கூட்டணியை வைத்து தான் ஆட்சி செய்கிறீர்கள். தலித்துகளை அதிகாரத்திற்கு வர மன்னர் ஆட்சி விடாது. மன்னர் ஆட்சியை கேள்வி கேட்டால், உடனே சங்கி, நக்சல் என்று கூறிவிடுவார்கள். நீ என்னவேண்டுமானாலும் சொல்லு, கவலை இல்லை. தமிழக மக்கள் புதிய அரசியலை உருவாக்க முடிவு செய்துவிட்டார்கள்.

அதிகாரத்தை உருவாக்குங்கள் என்று அம்பேத்கர் சொன்னார். நாம் அதை உருவாக்குவோம். அதற்காக தான் நான் திருமா உடன் சேர்ந்தேன். என் சாதி சர்டிபிகேட்டை பார்த்து, இவன் இந்த சாதி என்கிறார்கள். என்னுடைய ஒரே வேண்டுகோள், தீண்டாமை ஒழிப்பு முக்கியமல்ல, சாதியை அழிக்க வேண்டும். விஜய் அவர்கள் வேங்கைவயல் கிராமம் சென்று, மக்களுடன் உரையாட வேண்டும். நீங்கள் களத்திற்கு வரவேண்டும். ஒரு புத்தக வெளியீட்டினால் எப்படி எல்லா அமைச்சர்களையும் அம்பேத்கருக்கு மாலை போட்டு புரட்சியாளர் என்று கூறினார்களோ, அது தான் உங்கள் வெற்றி.

இணைந்து பயணிக்க வேண்டும். அப்போது தான், இங்கு எல்லாம் மாறும்,’’ என்று அந்த நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜூனா பேசினார்.

இது அரசியல் அரங்கில் சலசலப்பினை ஏற்படுத்திய விளைவே, விசிக நிறுவனத்தலைவர் திருமாவளவனின் நடவடிக்கைக்குக் காரணம் எனக்கூறப்படுகிறது.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.