Veerappan: ’வீரப்பனின் அறியப்படாத பழக்க வழக்கங்கள்!’
”பலரும் அறியாத அவரது பழக்க வழக்கங்கள் குறித்து பல்வேறு காலகட்டத்தில் பலர் கூறிய கருத்துகள் இதோ!”

மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடர்ந்த காடுகளில் தலைமறைவாக இருந்து அழிக்க முடியாத அடையாளங்களை விட்டுச்சென்றுள்ள வீரப்பனின் வாழ்கை சர்ச்சைகள் நிறைந்தது. தமிழ்நாடு - கர்நாடக எல்லை பகுதியில் அமைந்துள்ள கோபிநத்தம் எனும் ஊரில் 1952ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி பிறந்த வீரப்பன், வேட்டையாடுபவராகவும், சந்தனக் கடத்தல்காரராகவும், பல்வேறு கொலைகளை செய்தவராகவும் அறியப்படுகிறார்.
வீரப்பனின் குற்றம் குறித்து பேசுபவர்கள், வீரப்பன் பெயரை சொல்லி காவல்துறை செய்த மனித உரிமை மீறல்கள் குறித்து பேசத் தயங்குவதாக இன்றளவும் சில அரசியல் இயக்கங்களால் விமர்சனங்கள் முன் வைக்கப்படுகிறது.
அவரது பிறப்பு முதல் 18 அக்டோபர் 2004ஆம் ஆண்டில் அவர் கொலை செய்யப்பட்டது வரை பல்வேறு சர்ச்சைகளும், யூகங்களும் இன்றளவும் பேசப்பட்டே வருகின்றன.
பலரும் அறியாத அவரது பழக்க வழக்கங்கள் குறித்து பல்வேறு காலகட்டத்தில் பலர் கூறிய கருத்துகள் இதோ!
- வீரப்பனுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம், மாதேஸ்வன் மலைக்கோயில் மீது வீரப்பனுக்கு அதீத ஈடுபாடு உண்டு.
- தான் எடுக்க போகும் முக்கிய முடிவுகளை சோழி உருட்டி பார்த்துவிட்டு எடுக்கும் பழக்கம் வீரப்பனுக்கு இருந்துள்ளது.
- காட்டில் உள்ள பறவைகள் உள்ளிட்ட பிற உயிரினங்கள் கத்தும் சத்தத்தை வைத்து சகுணம் பார்க்கும் பழக்கம் வீரப்பனுக்கு இருந்துள்ளது.
- காட்டில் தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்தாலும் அன்றாட நாட்டு நடப்புகளை அறிந்து கொள்வதில் வீரப்பன் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். அவர் வைத்திருந்த ரேடியோ மூலம் பிபிசி தமிழோசை அலை வரிசையில் செய்திகளை அன்றாடம் அறிந்து வந்தார்.
- மேலும் நாளிதழ்கள், வார இதழ்கள் உள்ளிட்டவற்றை வாங்கி வரச்செய்து அரசியல் நிகழ்வுகளை அறிந்து கொள்வதை வீரப்பன் வழக்கமாக வைத்திருந்தார்.
- வானொலிகளில் விளம்பரப்படுத்தப்படும் பொருட்களை சந்தையில் இருந்து வாங்கி வரச்சொல்லி பயன்படுத்தும் பழக்கத்தைல் வீரப்பன் வைத்திருந்தார்.
- ஒருமுறை காவல்துறை அடர் காட்டில் வீரப்பன் வசித்த இடங்களை நெருங்கிய போது ஃபேர் அண்ட் லவுலி, கோல்கேட் பேஸ்ட் உள்ளிட்ட பொருட்களை வீரப்பன் குழுவினர் பயன்படுத்தி இருந்ததை உறுதி செய்திருந்தனர்.
- பெரும் கொலைக்காரனாக அடையாளப்படுத்தபடும் வீரப்பனுக்கு மதுப்பழக்கமோ அல்லது பெண்களிடம் தொடர்போ ஏதும் இல்லை என்பது காவல் துறையினர் இன்றளவும் சொல்லும் கருத்தாக உள்ளது.
- வீரப்பனுக்கு தமிழ்சினிமாவில் பிடித்த நடிகர் சிவாஜி என தன்னிடம் சொல்லி உள்ளதாக நக்கீரன் ஆசிரியர் கோபால் பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசி உள்ளார்.
