Thiruparankundram: திருப்பரங்குன்றம் மலையேற சென்ற எல்.முருகன் தடுத்து நிறுத்தம்! போலிஸ் உடன் வாக்குவாதம்!
ஏராளமான பாஜக மற்றும் இந்து முன்னணி தலைவர்கள் உடன் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு எல்.முருகன் செல்ல முயன்றார். 5 பேருக்கு மேல் கூட்டமாக மலை ஏறக் கூடாது என காவல்துறையினர் கூறி எல்.முருகன் உள்ளிட்டோரை தடுத்து நிறுத்தினர்.

திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்ல முயன்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
திருப்பரங்குன்றத்தில் எல்.முருகன்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் கோயிலில் தரினம் செய்ய வந்திருந்தார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உடன் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியனும் வந்து இருந்தார். இருவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
செய்தியாளர் சந்திப்பு
சுவாமி தரிசனத்தை முடித்த எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், “திருப்பரங்குன்றம் மலை முருகப்பெருமானுக்கே சொந்தமானது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சிக்கந்தர் மலை என்று தவறாக குறிப்பிடுகின்றனர். திருப்பரங்குன்றம் சைவத் திருத்தலம். வைணவ, சைவ தளத்தில் பலியிடும் சம்பவங்கள் கிடையாது” என கூறினார்.
காவல்துறையால் தடுத்து நிறுத்தம்
பின்னர் ஏராளமான பாஜக மற்றும் இந்து முன்னணி தலைவர்கள் உடன் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு எல்.முருகன் செல்ல முயன்றார். 5 பேருக்கு மேல் கூட்டமாக மலை ஏறக் கூடாது என காவல்துறையினர் கூறி எல்.முருகன் உள்ளிட்டோரை தடுத்து நிறுத்தினர்.
காவல்துறை உடன் வாக்குவாதம்
இதனால் காவல்துறை அதிகாரிகள் உடன் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ’மத்திய இணையமைச்சரான என்னை தடுத்து நிறுத்த போலீஸ்க்கு அதிகாரம் இல்லை, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேரிடும்’ என கூறினார். இருப்பினும் காவல்துறையினர் தொடர்ந்து கூட்டமாக செல்ல அனுமதி மறுத்த நிலையில் 5 பேருடன் மட்டும் திருப்பரங்குன்றம் மலைக்கு சென்றார். இச்சம்பவம் திருப்பரங்குன்றம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
