BJP: கந்தர் மலையை சிக்கந்தர் மலையாக மாற்றுவதா? இந்துக்கள் போராட்டத்தை நசுக்குவதா? அரசை சாடும் எல்.முருகன்!
இது தமிழ்க் கடவுளான முருகப்பெருமானை இழிவுபடுத்தி, அவமானப்படுத்துகின்ற செயல். காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களின் மனதைப் புண்படுத்துவதோடு, இந்துக்களின் வழிபாட்டு உரிமையையும், மரபுகளையும் பறிக்கும் செயல்.

திருப்பரங்குன்றம் இந்து மக்களின் உரிமை போராட்டத்தை நசுக்கி விடலாம் என எண்ணி, காவல் துறையினர் செயல்பட்டு வருகின்றனர் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டி உள்ளார்.
மலை பெயரை மாற்ற முயற்சி
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் கந்தர் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற தொடர்ந்து ஒரு கும்பல் முயன்று வருகிறது. திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. பழனியாண்டவர் கோவில் மலைப்பாதை வழியாக காலம் காலமாக காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு வேல் எடுத்துச் செல்லப்படுகிறது.
வழிப்பாட்டு உரிமையை பறிக்கும் செயல்
சில நாட்களுக்கு முன்பு, அங்கு ஆடு பலி கொடுக்க சென்ற நபர்களால் பெரிய அளவில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் திரு. நவாஸ் கனி, பிரியாணி கொண்டு சென்று சாப்பிட்டு, மலையின் புனிதத்தைக் கெடுத்தார். இது தமிழ்க் கடவுளான முருகப்பெருமானை இழிவுபடுத்தி, அவமானப்படுத்துகின்ற செயல். காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களின் மனதைப் புண்படுத்துவதோடு, இந்துக்களின் வழிபாட்டு உரிமையையும், மரபுகளையும் பறிக்கும் செயல்.
திமுக ஆதரவுடன் மிகப்பெரிய அநீதி
திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், இந்துக்களுக்கு எதிராக மிகப்பெரிய அநீதி நடந்து கொண்டிருக்கிறது. திருப்பரங்குன்றத்தைக் காக்க வேண்டும் என்ற உணர்வு பக்தர்களிடம் தன்னெழுச்சியாக ஏற்பட்டு வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக, இந்து முன்னணி அமைப்பினர் வரும் 4-ம் தேதி, திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தைக் காக்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
பிரச்சாரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை
இந்த நிலையில், ஆர்ப்பாட்டத்தை தடுக்கவும், இந்து முன்னணியின் பிரசாரத்தை ஒடுக்கும் விதமாகவும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக சுவரொட்டி ஒட்டுபவர்கள், நோட்டீஸ் வழங்குபவர்களை தமிழக காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். திருப்பரங்குன்றத்தில் அசைவ உணவு சாப்பிட்டவர்கள், அங்கிருந்த சமணர் வாழ்ந்த படுகைகளில், பச்சை பெயிண்ட் அடித்தவர்களை கைது செய்யாத காவல்துறையினர், முருகன் மலையைக் காக்க ஜனநாயக முறையில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள்
தமிழகக் காவல் துறையின் இந்து விரோதச் செயல்களை வன்மையாக கண்டிக்கிறேன். மிரட்டல்கள் மூலம், ஜனநாயக முறையில் நடைபெறும் திருப்பரங்குன்றம் இந்து மக்களின் உரிமை போராட்டத்தை நசுக்கி விடலாம் என எண்ணி, காவல் துறையினர் செயல்பட்டு வருகின்றனர். தமிழக அரசும், முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களும் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும். திமுக கூட்டணி கட்சிகளின் இந்து விரோத செயல்பாடுகளுக்கு வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் சரியானப் பாடம் புகட்டுவார்கள்.
