மும்மொழிக் கொள்கை: ’கல்வியை அரசியலாக்க வேண்டாம்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தர்மேந்திர பிரதான் கடிதம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மும்மொழிக் கொள்கை: ’கல்வியை அரசியலாக்க வேண்டாம்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தர்மேந்திர பிரதான் கடிதம்!

மும்மொழிக் கொள்கை: ’கல்வியை அரசியலாக்க வேண்டாம்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தர்மேந்திர பிரதான் கடிதம்!

Kathiravan V HT Tamil
Published Feb 21, 2025 01:05 PM IST

அரசியல் காரணங்களுக்காக தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பதால், தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இந்த கொள்கை மூலம் கிடைக்கும் மகத்தான வாய்ப்புகளையும் வளங்களையும் இழக்கின்றன எச்சரிக்கை

மும்மொழிக் கொள்கை: ’கல்வியை அரசியலாக்க வேண்டாம்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தர்மேந்திர பிரதான் கடிதம்!
மும்மொழிக் கொள்கை: ’கல்வியை அரசியலாக்க வேண்டாம்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தர்மேந்திர பிரதான் கடிதம்!

தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு மற்றும் மாநில அரசு இடையே கருத்து வேறுபாடு எழுந்து உள்ளது. தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய 2500 கோடி நிதியை வழங்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்த நிலையில், தற்போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார். 

மும்மொழிக் கொள்கை முதுகெலும்பு 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி உலகம் முழுவதும் எடுத்து சென்று வருகிறார். உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகள் தமிழ் உட்பட 13 மொழிகளில் நடைபெறுகிறது. 1968ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவின் கல்விக் கட்டமைப்பில் மும்மொழிக் கொள்கை முதுகெலும்பாக விளங்குகிறது. தமிழ் உட்பட ஒவ்வொரு மொழியையும் தேசிய கல்விக் கொள்கை மூலம் உரிய இடத்தை பெற உறுதி செய்வதே நோக்கம்.

முதலமைச்சர் சிந்திக்க வேண்டும் 

சமூக மற்றும் கல்வி முன்னேற்றத்தின் ஒளியாக தமிழ்நாடு எப்போதும் திகழ்கிறது. இந்தியாவில் மாற்றங்கள் மற்றும் சீர்த்திருங்கள் ஏற்பட முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. நவீன கல்வியை வடிவமைத்து, விளிம்பு நிலை சமூகங்களை உயர்த்தி அனைவரையும் உள்ளடக்கிய கல்வி கற்றல் சூழலை தமிழ்நாடு வளர்த்ததில் முன்னணியில் திகழ்கிறது. அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, புதிய தேசிய கல்விக் கொள்கையால் பயனடையும் இளம் மாணவர்களின் நலன்கள் குறித்து தமிழக முதல்வர் சிந்திக்க வேண்டும் என்று பிரதான் கூறியுள்ளார்.

வாய்ப்புகளையும் வளங்களையும் இழக்கின்றன

அரசியல் காரணங்களுக்காக தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பதால், தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்களுக்கு இந்த கொள்கை மூலம் கிடைக்கும் மகத்தான வாய்ப்புகளையும் வளங்களையும் இழக்கின்றன. இந்த கொள்கை நெகிழ்வானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது, மாநிலங்கள் தங்கள் தனித்துவமான கல்வித் தேவைகளுக்கு ஏற்ப அதன் செயல்படுத்தலைத் தனிப்பயனாக்க அனுமதிக்கிறது.

மாணவர்கள் நலனை கருத்தில் கொள்க

"மேலும், சமக்ர சிக்ஷா போன்ற மத்திய ஆதரவு திட்டங்கள் தேசிய கல்விக் கொள்கை 2020 உடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், பிஎம் எஸ்ஆர்ஐ பள்ளிகள் தேசிய கல்விக் கொள்கையின் முன்மாதிரியான பள்ளிகளாக கருதப்பட்டுள்ளன என தெரிவித்து உள்ளார். மும்மொழி திட்டம் எந்தவொரு மொழியையும் திணிப்பதை கொள்கை பரிந்துரைக்கவில்லை பாஜக அல்லாத பல மாநிலங்கள் அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும் புதிய கல்விக் கொள்கையின் முற்போக்கான கொள்கைகளை அமல்படுத்தி உள்ளன. எனவே, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, நமது இளம் மாணவர்களின் நலனை மனதில் கொண்டு இந்த விஷயத்தை முழுமையாக ஆராயுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தர்மேந்திர பிரதான் தெரிவித்து உள்ளார்.