மும்மொழிக் கொள்கை: ’கல்வியை அரசியலாக்க வேண்டாம்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தர்மேந்திர பிரதான் கடிதம்!
அரசியல் காரணங்களுக்காக தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பதால், தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இந்த கொள்கை மூலம் கிடைக்கும் மகத்தான வாய்ப்புகளையும் வளங்களையும் இழக்கின்றன எச்சரிக்கை

கல்வியை அரசியலாக்க வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதி உள்ளார்.
தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு மற்றும் மாநில அரசு இடையே கருத்து வேறுபாடு எழுந்து உள்ளது. தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய 2500 கோடி நிதியை வழங்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்த நிலையில், தற்போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
மும்மொழிக் கொள்கை முதுகெலும்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி உலகம் முழுவதும் எடுத்து சென்று வருகிறார். உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகள் தமிழ் உட்பட 13 மொழிகளில் நடைபெறுகிறது. 1968ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவின் கல்விக் கட்டமைப்பில் மும்மொழிக் கொள்கை முதுகெலும்பாக விளங்குகிறது. தமிழ் உட்பட ஒவ்வொரு மொழியையும் தேசிய கல்விக் கொள்கை மூலம் உரிய இடத்தை பெற உறுதி செய்வதே நோக்கம்.