80 பவுன் நகை திருட்டில் திடீர் திருப்பம் - காதலியுடன் தலைமறைவான நண்பன்!
விளாத்திகுளம் அருகே சல்லிசெட்டிபட்டி நகை திருட்டு வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், காதலியுடன் தலைமறைவாகிய மற்றொரு நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சல்லிசெட்டிபட்டியில் 80 பவுன் நகையை திருடி நண்பர்களுடன் மது அருந்தியபோது, அவரிடம் இருந்து நகைகளை மற்றொரு நண்பர் திருடிச் சென்று காதலியுடன் தலைமறைவாகிவிட்டார்.
ட்ரெண்டிங் செய்திகள்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சல்லிசெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவர் சவுதி அரேபியாவில் சிவில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரது தாய் அழகு குணசுந்தரி. செல்லபாண்டி மனைவி ராதா மற்றும் குழந்தைகள் விளாத்திகுளம் அம்பாள் நகரில் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி ராதா தனது மாமியார் மற்றும் குடும்பத்தினருடன் மதுரைக்கு சென்றுவிட்டு இரவு சல்லிசெட்டிபட்டியில் உள்ள கணவரின் சொந்த வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 80 பவுன் தங்க நகை காணமால் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கதவு, பீரோ உடைக்கப்படாமல் நகை திருடு போனதால் சந்தேகம் அடைந்த ராதா சங்கரலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தனிபிரிவு போலீஸார் மற்றும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் கைரேகையை எடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் செல்லப்பாண்டி உறவினர்களான சல்லிசெட்டிபட்டியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் வசந்தகுமார் ஆகியோர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் பல தகவல்கள் தெரியவந்தன.
செல்லப்பாண்டி வீட்டுக்கு 2 சாவிகள் உள்ள நிலையில், ஒரு சாவி மனைவி ராதாவிடமும் மற்றொரு சாவி தாய் அழகு குணசுந்தரியிடம் இருந்துள்ளது. அழகு குணசுந்தரி வெளியூர் செல்லும்போது தனது உறவினரான மணிகண்டன் வீட்டில் சாவியை கொடுத்து செல்வது வழக்கம். மணிகண்டன் அந்த சாவி மூலம் முதலில் 2 பவுன் நகையை மட்டும் திருடி, அடகு வைத்து தனது நண்பருடன் செலவு செய்துள்ளார்.
அதை யாரும் கண்டுபிடிக்காததால் செல்லப்பாண்டி வீட்டு பீரோவில் இருந்த மேலும் 80 பவுன் நகையை திருடி மதுரையில் தனியார் லாட்ஜில் அறை எடுத்து தனது நண்பர்களான சல்லிசெட்டிபட்டியைச் சேர்ந்த வசந்தகுமார் மற்றும் தேனி வடுகபட்டியை சேர்ந்த பிரபாகரனுடன் சேர்ந்து மது அருந்தியிருக்கிறார். போதையில் மணிகண்டன், வசந்தகுமார் இருவரும் நல்ல அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த போது 80 பவுன் நகை இருந்த பேக்கினை பிரபாகரன் நைசாக எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார். நகைகளை எடுத்துச்சென்ற பிரபாகரன் தனது காதலியுடன் தலைமறைவாக இருப்பது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள பிரபாகரனை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
டாபிக்ஸ்