சென்னையில் 1 மணி நேரத்தில் அடுத்தடுத்து செயின் பறிப்பு.. விமானத்தில் தப்ப முயன்ற கொள்ளையர்களை கொத்தாக தூக்கிய போலீஸ்!
Chain Snatching: சென்னையில் செயின் பறிப்பை நடத்திவிட்டு விமானம் மூலம் தப்பிக்க முயன்ற வடமாநிலத்தை சேர்ந்த கும்பலை விமானத்தை நிறுத்தி காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அடையாறு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிண்டி, சைதாப்பேட்டை, பெசண்ட் நகர், வேளச்சேரி, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் இருசக்கர வாகனத்தில் சென்று எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
திருவான்மியூர் இந்திரா நகரில் வேலைக்கு சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 5 சவரன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். மூதாட்டிகள் உள்ளிட்டோரிடம் இருந்து மொத்தம் 20 சவரனுக்கும் மேல் நகையை பறித்துச் சென்றுள்ளனர்.
விசாரணையில் இறங்கிய காவல்துறை
பள்ளிக்கரணையில் இருந்து அடையாறு, வேளச்சேரி, கிண்டி, சைதாப்பேட்டை பகுதிகளில் சில மணி நேரத்தில் இந்த குற்றச் செயல்கள் அனைத்தும் அரங்கேறி இருப்பது அப்பகுதிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அனைத்து சம்பவங்களிலும் ஒரே கும்பல் தான் ஈடுபட்டு இருக்கலாம், இருசக்கர வாகனத்தில் வந்தது இருவராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.