புறக்கணிக்கப்படுகிறாரா அஜிதா ஆக்னல்.. விஜய் இருக்கும் மேடையில் துண்டிக்கப்பட்ட நேரலை.. தவெகவில் சலசலப்பு!
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்துக்கும், அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னலுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருவது அக்கட்சியின் நிர்வாகிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராக செயல்பட்டு வருபவர் அஜிதா ஆக்னல். தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டதில் இருந்து களப்பணி மற்றும் சமூக ஊடகங்களில் பம்பரமாக சுழன்று வரும் இவருக்கும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்துக்கும் தற்போது மோதல் போக்கு நிலவி வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற மேடையிலேயே எதிரொலித்தது தான் தற்போது பேசுபொருளாக மாறி இருக்கிறது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தவெகவின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற அஜிதாவுக்கு பொதுக்குழுவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை. அதேபோல் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியிலும் அஜிதா ஆக்னல் புறக்கணிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்தநிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை கவுரவிக்கும் விதமாக கல்வி விருது வழங்கும் விழா மாமல்லபுரத்தில் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு, தூத்துக்குடி மாவட்ட தொகுதி பொறுப்பாளர் அஜிதா ஆக்னல், அம்மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுடன் நேற்று மாமல்லபுரத்திற்கு வருகை புரிந்துள்ளார்.