தவெக தலைவர் விஜய் அதிரடி.. வக்ஃபு சட்டத் திருத்தத்திற்கு எதிராக வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை!
திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வக்ஃபு சட்டத் திருத்தத்திற்கு எதிராக ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகமும் வழக்கு தொடர்ந்துள்ளது.

வக்ஃபு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் பெயரில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வக்ஃபு சட்டத் திருத்தத்திற்கு எதிராக ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகமும் வழக்கு தொடர்ந்துள்ளது.
சமீபத்தில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் வக்ஃபு வாரிய திருத்த சட்ட மசோதா நிறைவேற்றபட்ட நிலையில் தமிழக வெற்றிக் கழகம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.
வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக விஜய் வெளியிட்டிருந்த அறிக்கை:
முன்னதாக மத்திய அரசின் வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில், "ஜனநாயகத்துக்கு எதிரான வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். ஏனென்றால் இந்த மசோதா என்பது மதசார்பற்ற இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கைகளையும், அரசியலமைப்பின் மாண்பையும் மீண்டும் ஒருமுறை கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது.
அரசியலமைப்பு சட்டத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. வக்ஃபு வாரிய சட்டம் என்பது முஸ்லிம்களின் இறையியல் வாழ்வு மற்றும் சமூக பொருளாதாரத்தோடு பின்னிப் பிணைந்தது இஸ்லாமிய தனியுரிமை சட்டத்தின் முக்கிய அமைப்பு.
வக்ஃபு வாரிய சட்டத்தை சிதைப்பது என்பது சிறுபான்மையினருக்கு நம் அரசியலமைப்பும், நம் நாட்டின் தலைவர்களும் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் காற்றில் பறக்க விடுவதன்றி வேறென்ன? இதனால் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்." என கூறியிருந்தார். இந்த நிலையில், வக்ஃபு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
வக்ஃபு வாரிய சட்டத்திற்கு எதிராக போராட்டம்
மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் சமீபத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. சென்னை பனையூரில், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலை முன்பாக நடைபெற ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் மற்றும் மாவட்டச் செயலாளர் ஈ.சி.ஆர்.சரவணன் மற்றும் ஏராளமான தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், மத்திய அரசுக்கு எதிராகவும், வக்பு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். பொதுச் செயலாளர் என். ஆனந்த் தலைமையில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
