எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதா? அமித்ஷாவிற்கு எதிராக கொந்தளித்த தவெக தலைவர் விஜய்
மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கரை அவமதித்ததாக கூறி அவருக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கரை மத்திய அமைச்சர் அமித்ஷா அவமதித்ததாகக் கூறி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அமைச்சருக்கு எதிராக கண்டனப் பதிவை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
விஜய்யின் பதிவு
அந்தப் பதிவில், "யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர்.
அம்பேத்கர்...
அம்பேத்கர்... அம்பேத்கர்...
அவர் பெயரை
உள்ளமும் உதடுகளும் மகிழ
உச்சரித்துக்கொண்டே இருப்போம்.
எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, நாட்டின் அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நாடாளுமன்ற கூட்டுத் தொடரின் 2 நாள் விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சில கருத்துகளை முன்வைத்தார்.
ஃபேஷன் ஆகிவிட்டது
மாநிலங்களவையில் பேசிய அவர், தற்போது 'அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர் என முழக்கமிடுவது ஃபேஷன் ஆகிவிட்டது. அப்படி சொல்வதற்குப் பதிலாக இவ்வளவு முறை கடவுளின் பெயரை உச்சரித்திருந்தால், நிச்சயம் சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்' என்று கூறினார்.
எதிர்கட்சிகள் போராட்டம்
இவரது இந்தக் கருத்திற்கு நாடாளுமன்றத்தில் பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன், அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய அமித் ஷாவைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள், அம்பேத்கரின் புகைப்படத்தை கையில் ஏந்தி இன்று நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
விஜய்யிடம் கேள்வி
இந்நிலையில், அம்பேத்கரை தலைவராக ஏற்றுக் கொண்டதாக தொடர்ந்து பேசிவரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அமித் ஷா பேசியதற்கு ஏன் எந்த பதிலும் கூறவில்லை எனத் தொடர்ந்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கிடையில், அமித் ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து விஜய் தனது எக்ஸ் தள பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார்.