TVK: விஜய் கட்சியில் புகைச்சல்?.. தவெக-வில் நிர்வாகிகள் நியமனத்துக்கு வசூல் வேட்டை?.. எச்சரிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
TVK: சென்னை, பனையூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் நிர்வாகிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

TVK: சென்னை, பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், "தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி கொடுப்பதற்காக யாராவது பணம் வாங்கினால், அவர்கள் மீது எந்த பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக, விழுப்புரம் நகர தலைவர் பதவிக்கு ரூ.15 லட்சம் கேட்பதாக புகார் எழுந்திருந்தது. இதுகுறித்து விழுப்புரம் தவெக வாட்ஸ் ஆப் குரூப்பில் வாட்ஸ் ஆப் சேட் ஒன்று கசிந்துள்ளது. அதில், விழுப்புரம் மாவட்ட தலைவராக இருக்கும் 'குஷி' மோகன் நகர தலைவர் பதவிக்கு ரூ.15 லட்சம் நிர்ணயித்தாக குற்றச்சாட்டு கூறப்பட்டிருந்தது. 19 அணி தலைவர்களுக்கும் அந்தந்த பதவிக்கு ஏற்ற வகையில் பணம் நிர்ணயம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
எச்சரிக்கை விடுத்த புஸ்ஸி ஆனந்த்
விழுப்புரம் மாவட்டம் மட்டுமல்லாமல் மற்ற மாவட்டங்களிலும் பணம் வசூல் செய்யப்படுவதாக தொடர் புகார் எழுந்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி கொடுப்பதற்காக யாராவது பணம் வாங்கினால், அவர்கள் மீது எந்த பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது தலைவர் விஜயின் எச்சரிக்கை எனவும் புஸ்ஸி ஆனந்த் கடுமையாக பேசியிருப்பது அக்கட்சியினர் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
'Work From Home' அரசியல்வாதி
நடிகர் விஜய் கடந்தாண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே கட்சி தொடங்கி இருந்தாலும், கடந்த ஆண்டு இறுதியில் தான் விக்கிரவாண்டி வி.சாலையில் கட்சியின் முதல் மாநாட்டை நடத்தி இருந்தார். மாநாட்டில் பேசிய விஜய், கட்சியின் கொள்கை, செயல் திட்டத்தை அறிவித்ததுடன் மத்தியில் ஆளும் பாஜகவையும், மாநிலத்தை ஆளும் திமுகவையும் நேரடியாக விமர்சித்து பேசியிருந்தார். தொடர்ந்து சமூகவலைதளங்களில் அறிக்கை, அவ்வபோது பனையூரில் ஆலோசனை கூட்டம் என்பது மட்டுமே விஜய்யின் அரசியலாக இருந்தது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கூட பனையூர் அலுவலகத்துக்கு வரவழைத்துதான் நிவாரண உதவிகளை வழங்கியிருந்தார். இதனாலே 'Work From Home' அரசியல்வாதி என்று விஜய் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது.
பனையூர் டூ பரந்தூர் அரசியல்
விமர்சனங்கள் ஒருபுறம் எழுந்தாலும், திமுக எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டில் விஜயின் பேச்சில் வீரியம் குறையாமல் இருந்தது. தொடர்ந்து, பெரியார் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு அவர் பேசியது தமிழக அரசியலில் புயலை கிளப்பியது. இந்த சூழலில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடிய மக்களை விஜய் நேரில் சந்திக்க திட்டமிடப்பட்டு அந்த சந்திப்பும் சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில், பேசிய தவெக தலைவர் விஜய், திமுகவை மீண்டும் ஒருமுறை சீண்டியிருந்தார். “அரிட்டாப்பட்டில உங்களோட நிலைப்பாடை பாராட்டுறேன். அரிட்டாப்பட்டி மக்களை மாதிரிதான பரந்தூர் மக்களும்”, என விஜய் பேசியதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருந்தது. “நம்புற மாதிரி நாடகம் ஆடுறதுல நீங்கதான் கில்லாடியச்சே..” என பேசி தனது திமுக எதிர்ப்பை இன்னும் வலுவாக பதிய வைத்தார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்