Savukku Sankar: ’புகாரை ஏற்க மறுத்த போலீஸ்! தீக்குளித்த கூலித் தொழிலாளி!’ விளாசும் டிடிவி! கலாய்க்கும் சவுக்கு சங்கர்!
புளியந்தோப்பு பகுதியில் பட்டறை ஒன்றில் பணிபுரியும் சிலரால் தனது உயிருக்கு ஆபத்தான சூழல் நிலவுவதாகக் கூறி ஆர்.கே.நகர் காவல்நிலையத்தில் கூலித் தொழிலாளி அளித்த புகாரை ஏற்க மறுத்ததோடு, அவரை தரக்குறைவாக நடத்தியதே தற்கொலை முயற்சிக்கான முக்கிய காரணம் என கூறப்படுகிறது என டிடிவி அறிக்கை

புகாரை ஏற்க மறுத்ததால் காவல்நிலையம் முன்பாகவே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற கூலித் தொழிலாளி விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட ஆர்.கே.நகர் காவல்நிலைய காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையத்தின் முன்பாக, பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் உடல் முழுவதும் எரிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
தரக்குறைவாக நடத்தப்பட்டாரா?
புளியந்தோப்பு பகுதியில் பட்டறை ஒன்றில் பணிபுரியும் சிலரால் தனது உயிருக்கு ஆபத்தான சூழல் நிலவுவதாகக் கூறி ஆர்.கே.நகர் காவல்நிலையத்தில் கூலித் தொழிலாளி அளித்த புகாரை ஏற்க மறுத்ததோடு, அவரை தரக்குறைவாக நடத்தியதே தற்கொலை முயற்சிக்கான முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
மக்களின் குறைகளையும், துன்பங்களையும் போக்கி உரிய பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறை, ஆளுங்கட்சியின் ஏவல்துறையாக மாறியிருப்பதே இதுபோன்ற துயரச் சம்பவங்கள் காவல்நிலையம் முன்பாகவே அரங்கேற காரணமாக அமைந்துள்ளது.
அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது!
ஏற்கனவே, திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தில் காவல்நிலைய சித்ரவதைகளும், மரணங்களும் அதிகரித்து வருவதாக சொல்லப்படும் சூழலில், தற்போது புகார் அளிக்க வருவோரையும் தொடர்ந்து தரக்குறைவாக நடத்தி அலட்சியமாக செயல்படும் ஒரு சில காவலர்களால் ஒட்டுமொத்த காவல்துறை மீதும் மக்கள் மத்தியில் அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
எனவே, ஆர்.கே.நகர் காவல்நிலையம் முன்பாக நடைபெற்ற கூலித்தொழிலாளி தற்கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, காவலர்கள் அலட்சியமாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன் என தெரிவித்து உள்ளார்.
சவுக்கு சங்கர் பதிவு
டிடிவி தினகரனின் இந்த அறிக்கையை நேற்று சிறையில் இருந்து வெளியில் வந்த யூடியூபர் சவுக்கு சங்கர் பகிர்ந்து கருத்து தெரிவித்து உள்ளார்.
அதில், “அருணின் கிரீடத்தில் மேலும் மேலும் இறகுகள் சேர்க்கப்படுகின்றன. வாழ்த்துக்கள் சென்னை காவல்துறை” என பதிவிட்டு உள்ளார்.
