Annamalai: ’ஐ.டி ரெய்டு! டெல்லி நிதியை அமுக்கினாரா அண்ணாமலை?’ திருச்சி சூர்யா எழுப்பும் 6 கேள்விகள்!
ஊரில் உள்ள எல்லாரையும் ரைடு அனுப்புவேன் என மிரட்டும் உங்கள் வீட்டிற்கே ரைடு அனுப்பியது யார்? கட்சி வளர்ச்சிக்கு கடந்த சில வருடங்களாக டெல்லி அனுப்பிய நிதியை மச்சான் மூலம் தங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்தி விட்டீர்கள் என்ற கோபத்தில் அமித்ஷா தான் ரெய்டு அனுப்பினாரா?
கட்சி வளர்ச்சிக்கு கடந்த சில வருடங்களாக டெல்லி அனுப்பிய நிதியை மச்சான் மூலம் தங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்தி விட்டீர்கள் என்ற கோபத்தில் அமித்ஷா தான் ரெய்டு அனுப்பினாரா? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு வழக்கறிஞரும், முன்னாள் பாஜக நிர்வாகியுமான திருச்சி சூர்யா சிவா கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக தனது ‘எக்ஸ்’ தள பதிவில், அண்ணாமலைக்கு ஆறு கேள்விகள் என கேள்விகளை எழுப்பி உள்ளார்.
அதில், அண்ணன் அண்ணாமலை அவர்களே வணக்கங்க. தான் மட்டுமே யோக்கியமான அரசியல்வாதி என்ற நினைப்பில் எல்லாரையும் கேள்வி கேட்கும் நீங்கள் நான் கேட்கும் ஆறு கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா ?
* மத்திய அரசின் வருமானவரித்துறை கடந்த மூன்று நாட்களாக சோதனை நடத்திய திண்டுக்கல் சத்திரபட்டி செந்தில்குமாருக்கும் உங்களுக்கும் என்ன உறவு? உங்களுடைய அத்தை மகனின் மச்சானா அவர்?
* கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு,கர்நாடகா என பல நூறு கோடி முதலீடு சட்டவிரோதமாக நடந்துள்ளது என வருமான வரித்துறை சொல்வது உண்மையா? இது நீங்கள் கொள்ளையடித்த பணமா?
* உங்கள் உடன்பிறந்த அக்காவின் கணவர் (மச்சான்) சிவக்குமார் அவர்களும் சத்திரபட்டி செந்தில்குமாருடன் இணைந்து பழனி புளியம்பட்டியில் *அண்ணாமலையார் சேம்பர் பிரிக்ஸ்* என பல ஏக்கரில் தொழில் நடத்துவது உண்மையா ?
* பல ஆண்டுகளாக கோடி கணக்கில் செங்கல் தொழில் செய்து வந்த பெரிய முதலாளிகளே செம்மண் தட்டுபாட்டினால் நிறுவனத்தை இழுத்து மூடிவிட்டனர், உங்கள் மச்சானுக்கு மட்டும் எஸ்.ஆர் மைன்ஸில் இருந்து இலவசமாக செம்மண் எப்படி அளவில்லாமல் கிடைக்கிறது?
* உங்களோட மச்சான் சிவக்குமார் அவர்களுக்கு அமைச்சர் சக்கரபாணி அவருடைய தொகுதியில் செங்கல் சூளை அமைத்து கொடுத்து, அரசு டெண்டர்கள் வழங்கி தொழில் வளர்ச்சிக்கு எல்லா வகையிலும் உதவி செய்கிறாரே சமுதாய பிரியத்திலா? அல்லது ஊழல் வழக்கில் மத்திய அரசு கைது செய்யும் என்ற பயத்திலா ? இதனால் தான் திமுகவில் இருக்கும் மற்ற அமைச்சர்களை விமர்சனம் செய்யும் நீங்கள் அமைச்சர் சக்கரபாணியை பற்றி விமர்சனம் செய்வதில்லை?
* ஊரில் உள்ள எல்லாரையும் ரைடு அனுப்புவேன் என மிரட்டும் உங்கள் வீட்டிற்கே ரைடு அனுப்பியது யார்? கட்சி வளர்ச்சிக்கு கடந்த சில வருடங்களாக டெல்லி அனுப்பிய நிதியை மச்சான் மூலம் தங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்தி விட்டீர்கள் என்ற கோபத்தில் அமித்ஷா தான் ரெய்டு அனுப்பினாரா? பாஜக ஆட்சியில் ஒரு மாநில தலைவரின் உறவினர் (மச்சான்) வீட்டிலேயே ஐடி ரெய்டு நடப்பது இதுதான் முதல்முறையாமே? உங்களை ராஜினாமா செய்ய சொல்லி மிரட்டித்தான் இந்த ரெய்டா? ராஜினாமா செய்யாவிட்டால் அடுத்தது உங்கள் மாமனார் சுவாமிநாதன் வீட்டுக்கும், நண்பர்கள் சி.ஆர் சிவக்குமார் நாயர், திருநாவுக்கரசு, ஆதித்யா முத்துசாமி வீட்டிற்கும் ரெய்டு வர போகுதாமே?
விக்கிரமாதித்தன் வேதாளம் போல என்னுடைய கேள்விகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் உண்மை வெளிச்சத்திற்கு வரும் வரை என கூறி உள்ளார்.
டாபிக்ஸ்