Trichy suriya:கேசவ விநாயகத்தை மாற்றுங்கள்!பாஜகவிலிருந்து விலகிய திருச்சி சூர்யா
பெண் நிர்வாகியை ஆபாச பேசிய விவகாரத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த தமிழக பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திருச்சி சூர்யா தனது டுவிட்டரில், "அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி, இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம் . நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும்.
ட்ரெண்டிங் செய்திகள்
அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் மாற்றப்பட வேண்டும். இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும் . இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன் . உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவின் மூலம் பாஜவில் இருந்து விலகுவதை அவர் உறுதி செய்துள்ளார். முன்னதாக, பாஜகவின் பெண் நிர்வாகி டெய்சி என்பவரிடம் தொலைப்பேசி உரையாடலில் ஆபாசமாக பேசியதாக கூறி சூர்யா ஆறு மாத காலத்துக்கு கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். இதையடுத்து தற்போது அவர் உட்கட்சி பூசல் காரணமாக கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் பாஜக சிறுபான்மையினர் பிரிவு தலைவர் டெய்சி சரண், ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவா செல்போனில் மோதி கொண்ட ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியது. அந்த ஆடியோவில் சூர்யா சிவா, டெய்சி சரணை தகாத வார்த்தைகளால், ஆபாசமாக பேசியதும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை தாக்கல் செய்ய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்ட நிலையில், அந்த அறிக்கை வரும் வரை சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் எனவும் அவரை இடைநீக்கம் செய்தும் உத்தரவிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக திருச்சி சூர்யா, டெய்சி சரண் ஆகியோர் தங்கள் தரப்பிலிருந்து விளக்கமும் அளித்தனர். அதில், சூர்யா சிவா தம்பி போல் பழகி வந்தார். இந்த விவகாரத்தை இருவரும் பரஸ்பரம் பேசி முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளோம். ஊடகங்கள் இதை பெரிதுபடுத்த வேண்டாம்" என டெய்சி சரண் கூறினார்.
அதேபோல் திருச்சி சூர்யா," இருவருக்கும் இடையே தனிப்பட்ட உரையாடல் நிகழ்ந்தது. நான் பேசியது தவறு என்றால் கட்சி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்" என்றார்.
இதைத்தொடர்ந்து தற்போது தமிழக பாஜகவின் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் மாற்றப்பட வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து விட்டு திருச்சி சூர்யா கட்சியை விட்டு விலகியுள்ளார்.
டாபிக்ஸ்