Savukku Shankar: திருச்சி போலீஸ்க்கு கைமாறிய சவுக்கு சங்கர்! ஒருநாள் போலீஸ் காவலுக்கு அனுமதி!
”Savukku Shankar: இந்த வழக்கில் ஏற்கெனவே கைதான சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேற்றைய தினம் திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்”

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.
திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் சவுக்கு சங்கரை முதல் குற்றவாளியாகவும், பெலிக்ஸ் ஜெரால்டை இரண்டாவது குற்றவாளியாகவும் 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இதில் பெலிக்ஸ் ஜெரால்டு டெல்லியில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த வழக்கில் ஏற்கெனவே கைதான சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேற்றைய தினம் திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
சவுக்கு சங்கரை விசாரிக்க 7 நாட்கள் அனுமதி கேட்ட நிலையில், ஒருநாள் போலீஸ் காவலில் எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், மீண்டும் நாளை 4 மணி அளவில் மருத்துவ பரிசோதனை செய்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
சவுக்கு சங்கர் கைதின் பின்னணி
யூடியூபரும், பத்திரிக்கையாளருமான சவுக்கு சங்கர், ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலில் அதன் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு அளித்த பேட்டியில், “காவல்துறையில் பணியாற்றும் பெண்காவலர்கள்” குறித்து பேசிய கருத்து சர்ச்சை ஆனதால் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தேனியில் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசாரும், திருச்சி சைபர் கிரைம் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இது மட்டுமின்றி அவரது வீடு மற்றும் அலுவலங்களில் போலீசார் நடத்திய சோதனையில் சவுக்கு சங்கர் சங்கர் கஞ்சா பயன்படுத்தியதாக கூறி புதிய வழக்கு ஒன்றையும் காவல்துறையினர் பதிந்துள்ளனர்.
மேலும் பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கு தொடர்பாக ரெட்பிக்ஸ் நிறுவனத்தின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டை டெல்லியில் காவல்துறையினர் கைது செய்த நிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி சவுக்கு சங்கர் மீதும், பெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
கோவை சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கில் காவல்துறை விசாரணைக்கு சென்ற சவுக்கு சங்கர், தனது கையை காவல் துறையினர் உடைத்தாக நீதிமன்றத்தில் புகார் அளித்து இருந்தார். இந்த வழக்கில் சவுக்கு சங்கரின் நீதிமன்றக் காவல் நாளை உடன் நிறைவடைகிறது.
இதனிடையே திருச்சி சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கில் நேற்றைய தினம் திருச்சி மகிளா நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். கோவையில் இருந்து திருச்சிக்கு கொண்டு வரப்படும் வழியில் பெண் காவலர்கள் தன்னை முக கண்ணாடியை கழற்ற சொல்லி முகத்தில் அறைந்ததாகவும், மன்னிப்பு கேட்க சொல்லி வீடியோ எடுத்ததாகவும் நீதிபதியிடம் புகார் அளித்தார்.
இந்த நிலையில் சவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி சைபர் கிரைம் போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. நாளை மறுநாள் 4 மணிக்குள் சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், திருச்சியில் ரகசிய இடத்தில் வைத்து சவுக்கு சங்கரிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியியாகி உள்ளது.
இதன் இடையே தன் மீது பதியப்படுள்ள கஞ்சா வழக்கில் ஜாமீன் கேட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மனுத்தாக்கல் செய்து உள்ளார். இந்த வழக்கு வரும் மே 20ஆம் தேதி அன்று விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
