வன்னியர் சங்க பிரமுகர் படுகொலை, வங்கி கொள்ளை - முக்கிய செய்திகள் (ஆக.18)
வன்னியர் சங்க பிரமுகர் படுகொலை, சென்னை வங்கிக் கொள்ளையில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு தொடர்பு உள்ளிட்ட முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.
முக்கிய செய்திகள் - ஆகஸ்ட் 18
- பேருந்துகளில் பெண்களுக்கு தொல்லை கொடுத்தால் போலீஸில் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்க வகை செய்யும் விதத்தில் தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் கொண்டுவந்துள்ளது. இது உடனடியாக அமல்செய்யப்பட்டுள்ளது.
- கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் 5 பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பை விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
- தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 37 ஆர்சி புத்தகங்கள் மாயமானது தொடர்பாக 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
- கசப்புகளை மனதில் வைக்காமல் தூக்கியெறிந்து விட்டு அதிமுகவின் ஒற்றுமையே பிரதானம் என செயல்படலாம் வாருங்கள் என்று எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.
- அதிமுகவில் மீண்டும் தன்னோடு இணைந்து செயல்பட வருமாறு பன்னீர்செல்வம் விடுத்த அழைப்பை நிராகரித்த பழனிச்சாமி, ஓபிஎஸ் பதவியைத் தேடி ஓடுபவர் என விமரித்துள்ளார்.
- நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என்று கீதையில் கண்ணனின் உபதேசத்தை மனதில் கொண்டு அனைத்து மக்களின் நன்மைக்கும் உழைப்போம் என்று கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
- சென்னை வங்கிக் கொள்ளையில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து அவரது வீட்டில் இருந்து 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- உழவர்களின் நலனைக் காக்கும் வகையில் விழுப்புரம் மாவட்டத்திலும், பிற மாவட்டங்களிலும் மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அரசு ஆணையிட வேண்டும் என்று பா.ம.க தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
- தமிழறிஞர் நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
- மலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் முறைகேடாக கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கம் சிக்கியது.
- தமிழறிஞர் நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
- போஸ் கொடுத்தால் போதுமா; கடன் கொடுக்க மாட்டீர்களா? கதறும் நரிக்குறவர்களின் கண்ணீரைத் துடைக்குமா அரசு? என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது.
- ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில், தமிழ்நாடு மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார்.
- அதிமுகவில் இணைய வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் அழைப்புக்கு டி.டி.வி தினகரன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
- மொரப்பூர் ரயில் நிலையத்தில் ரயிலிலிருந்து இறங்கிய காவலர் நிலைதடுமாறி விழுந்ததில் உடல் சிதறி பலியானார்.
- குஜராத் கொலையாளிகள் முன்விடுதலை செய்யப்பட்டுள்ளதன் மூலம் பெண் இனத்திற்கு மாபெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாகனத்தின் மீது செருப்பு வீசியது தொடர்பான விவகாரத்தில், முன்ஜாமீன் கோரிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்துள்ளது.
- மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட கைதி, சிகிச்சைக்காக சென்ற இடத்தில் போலீஸாரை ஏமாற்றி தப்பி ஓடிவிட்டார்.
- ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரத்தில், கைது செய்யப்பட்ட 4 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- மயிலாடுதுறையில் நேற்று நள்ளிரவு வன்னியர் சங்கப் பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பா.ம.க, வன்னியர் சங்கத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
- தமிழகத்தில் புதிதாக 649 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
- தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விவசாயிடம் 14 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கைது செய்தனர்.
- ஆன்லைன் சூதாட்ட அரக்கனுக்கு இன்றுடன் முடிவுரை எழுதப்படட்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
- கல்வித் தொலைக்காட்சி சிஇஓவாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபரின் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் டாக்டர் அம்பேத்கரின் உருவப்படத்தை வைப்பது தொடர்பாக சுற்றறிக்கையை அனுப்ப, சட்டக்கல்வி இயக்குநருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பரிந்துரை செய்துள்ளது.
- 65 ஆவது காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க உள்ள சபாநாயகர் அப்பாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.சீர்காழியில் அருகே திருட்டுபோன இரு சக்கரவாகனத்தை சிசிடிவி காட்சி மூலம் தேடி இளைஞர்கள் சிலர் மீட்டுள்ளனர்.
- அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர்.
- ஆர்டர்லி முறையை ஒழிக்க தமிழ்நாடு அரசு மற்றும் டி.ஜி.பி எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தில் இ-சேவை மையங்கள் மூலம், தமிழ் வழியில் படித்தமைக்கான பிஎஸ் டிஎம் சான்றிதழ்கள் வழங்கும் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்