Bike Taxi: ’தமிழ்நாட்டில் பைக் டேக்ஸிகளுக்கு கட்டுப்பாடு ஏன்?’ போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம்!
பைக் டாக்ஸி ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு தரும் சூழலும் உள்ளது. இன்னொரு புறம் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆபத்தாக உணர்கிறார்கள் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி
வணிக நோக்கத்திற்காக பைக் டாக்ஸி பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனைத்து மண்டல மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகர்களுக்கு துறை ஆணையர் உத்தரவிட்டு உள்ளார். இதில் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டு மண்டலம் வாரியாக தினசரி மாலை 7 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பைக் டாக்ஸி விவகாரத்தில் நாம் மட்டும் முடிவேடுக்க முடியாது. இதில் ஒன்றிய அரசும் இணைந்து முடிவெடுக்க வேண்டும். பைக் டாக்ஸிகளை வாடகை ரீதியாக பயன்படுத்த ஒன்றிய அரசு அனுமதி தந்து உள்ளது. இது தொடர்பாக நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
நாம் இது குறித்து ஆய்வு செய்ய உயர் அலுவலகர்களை கொண்டு குழு அமைத்து உள்ளோம். தமிழ்நாட்டில் பைக் டாக்ஸி ஆனது கடந்த ஆட்சி காலத்தில் இருந்து பயன்பாட்டில் உள்ளது. அதில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டுதான் அந்த பணியை கையில் எடுத்துள்ளோம். வாடகை அல்லாத வாகனங்களில், ஒருவர் வாடகைக்கு பயணம் செய்வதை சட்டரீதியாக ஏற்றுக் கொள்ள முடியாது. அதில் ஏதேனும் ஒரு சிறு விபத்து ஏற்பட்டாலும் அதற்கான நிவாரணம் தேடும் போது நீதிமன்றம் அதை மறுக்கும் வாய்ப்பு உண்டு. எனவே இதை கருத்தில் கொண்டு ஆய்வு செய்து வருகிறோம்.
இன்னோருபுறம், ஆட்டோ சங்கங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நேற்று ஆர்பாட்டமும் நடந்து உள்ளது. பைக் டாக்ஸியில் பயணிக்கும் பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக ஆய்வு செய்வோம் என்று போக்குவரத்துத்துறை ஆணையர் அறிவித்து உள்ளார்.
பைக் டாக்ஸி ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு தரும் சூழலும் உள்ளது. இன்னொரு புறம் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆபத்தாக உணர்கிறார்கள். அரசை பொறுத்தவரை ஒன்றிய அரசு தரும் நடைமுறைகள், நீதிமன்றம் சொல்லும் நடைமுறைகளை கவனித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்போம். இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் உள்ள நிலையில் அதில் பயணிப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டு உள்ளது.
பைக் டாக்ஸியில் பயணிப்பவர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதால் ஒரு சக்கர வாகனங்கள் தணிக்கை செய்ப்படுகிறது. வாகனத்தை கைப்பற்றும் நடவடிக்கைக்குள் அரசு தற்போது செல்லாது. ஆவணங்கள் மற்றும் காப்பீடு இல்லை எனில் அபராதம் விதிக்கப்படும்.
பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் மீது ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்குதல் நடத்துவது குறித்த கேள்விக்கு, தொழில் போட்டி காரணமாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.