தலைப்பு செய்திகள்: ’பத்மபூஷன் விருது பெறும் நடிகர் அஜித்! அமைச்சராக பதவியேற்கும் மனோ தங்கராஜ்' இன்றைய முக்கிய செய்திகள்!
நடிகர் அஜித் குமாருக்கு பத்மபூஷன் விருது, அமைச்சர் பொறுப்பேற்கும் மனோ தங்கராஜ், பூந்தமல்லி-போரூர் இடையே மெட்ரோ ரயில் சோதனையோட்டம், கலைஞர் பல்கலைக்கழக சட்டமசோதா தாக்கல் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.அஜித் குமாருக்கு பத்மபூஷன் விருது
டெல்லியில் நடிகர் அஜித் குமாருக்கு இன்று மாலை பத்மபூஷன் விருது வழங்கப்பட உள்ளது. இன்று மாலை நடக்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த விருதினை அஜித்திற்கு வழங்குகிறார்.
2.மனோ தங்கராஜுக்கு பதவி பிரமாணம்
தமிழ்நாடு அமைச்சரவையில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ள மனோ தங்கராஜுக்கு இன்று மாலை 6 மணிக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். அவருக்கு மீண்டும் பால்வளத்துறை வழங்கப்படலாம் என தகவல்.
3.தமிழக அமைச்சரவை மாற்றம்
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம். செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரத்துறை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு. பத்மநாபபுரம் எம்.எல்.ஏ மனோதங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார். அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு வனத்துறை மற்றும் காதி துறை ஒதுக்கீடு.
4.இன்று மெட்ரோ சோதனை ஓட்டம்
பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை 9 கீ.மீ தொலைவுக்கு ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட சோதனை ஓட்டம் இன்று மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகிறது.
5.கலைஞர் பல்கலைக்கழக சட்டமசோதா
கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பது குறித்த சட்ட முன் வடிவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் இன்று தாக்கல் செய்ய உள்ளார்.
6.மீண்டும் உரிமை தொகை விண்ணப்பம்
மகளிர் உரிமை திட்டத்தில் விடுபட்டு உள்ள பெண்கள் முறையான ஆவணங்கள் உடன் வரும் ஜூன் 4ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்து உள்ளார். விடுபட்ட பெண்களை சேர்க்கும் வகையில் 9 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிப்பு.
7.கோடை விடுமுறை சிறப்பு ரயில்
கோடை விடுமுறையையொட்டி தாம்பரம்-திருச்சி இடையே நாளை முதல் ஜூன் 29 வரை இரு மார்க்கத்திலும் வாரத்தில் 5 நாட்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். திருச்சியில் இருந்து அதிகாலை 5.35 மண்க்கு புறப்படும் ரயில் மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் வரும். தாம்பரத்தில் இருந்து மதியம் 3.45 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 10.45 மணிக்கு திருச்சி சென்றடையும்.
8.எம்.சாண்ட் விலை குறைப்பு
சமீபத்தில் உயர்த்தப்பட்ட எம்-சாண்ட், ஜல்லி போன்றவற்றின் விலையை ரூ.1000 குறைக்க அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு.
9.விபத்து ஏற்படுத்திய சிறுமி - தந்தை கைது
தென்காசியில் சிவகிரியில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை குருசாமி கைது செய்யப்பட்டார்.
10.பருப்பில் கலப்படம் - சீமான் கண்டனம்
திண்டுக்கல் மாவட்டத்தில் நியாயவிலைக்கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படவிருந்த துவரம் பருப்பில் பட்டாணி பருப்பு கலப்படம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என சீமான் அறிக்கை.
