தலைப்பு செய்திகள்: ’ராணுவத்திற்கு ஆதரவாக சென்னையில் பேரணி முதல் மின் நிலையங்களில் போர் ஒத்திகை வரை!’ முக்கிய செய்திகள்!
வடசென்னை, கூடங்குளத்தில் போர் ஒத்திகை, இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக நாளை பேரணி, பஞ்சப்பூர் பேருந்து நிலையம் இன்று திறப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.மின் நிலையங்களில் போர் சூழல் ஒத்திகை
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உண்டாகி உள்ள நிலையில், வடசென்னை அனல் மின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையங்களில் நாளை மாலை போர் சூழல் ஒத்திகை நடைபெறும் என அறிவிப்பு.
2.இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக நாளை பேரணி
தீவிரவாதத்தை வளர்த்தெடுத்து, தான் கெட்டதோடு இந்தியாவிலும் அத்துமீறல்களில் ஈடுபடுகிறது பாகிஸ்தான். நம்மைக் காக்க வீரத்துடன் போர் நடத்தும் இந்திய இராணுவத்தினருக்கு நம் ஆதரவை வெளிப்படுத்தும் நேரம் இது. நாளை மாலை 5 மணிக்கு DGP அலுவலகத்தில் இருந்து தீவுத்திடல் போர் நினைவுச் சின்னம் வரை, எனது தலைமையில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர் பெருமக்கள், பொதுமக்கள், மாணவர்கள் பங்குபெறும் பேரணி நடைபெறும். மக்கள் அனைவரும் பங்கேற்று நம் ஒற்றுமையையும் உறுதியையும் காட்டுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
3.பஞ்சப்பூர் பேருந்து நிலையம் திறப்பு
திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த புதிய பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
4.சாந்தோம் சாலையில் இருவழி போக்குவரத்து
மெட்ரோ பணிகளுக்காக கடந்த ஆண்டு ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்ட சென்னை சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும் லூப் சாலை இன்று முதல் இருவழிப் போக்குவரத்துக்கு அனுமதி. மெட்ரோ பணிகள் முடிவடைந்த காரணத்தால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் (7.30 am - 11.00am மற்றும் 5.00pm - 8.30pm) மட்டும் ஒரு வழி பாதையாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5.மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து அம்மனை தரிசித்து வருகின்றனர். 4 மாசி வீதிகளிலும் தேர் செல்ல உள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிப்பு.
6.மதுரையில் போக்குவரத்து மாற்றம்
மதுரையில் வரும் மே 10ஆம் தேதி கள்ளழகர் புறப்பாடு காரணாமாக போக்குவரத்து மாற்றம். கள்ளந்திரி, லெட்சுமிபுரம், மாங்குளம், கிடாரிபட்டி வழியாக மேலூர் செல்ல வேண்டும். அழகர் கோயில் வழியாக மரக்காயர்புரம், நாயக்கன்பட்டி வழியில் மதுரை செல்லலாம். அழகர்கோவில் சாலையில் உள்ள தற்காலிக வாகன நிறுத்துமிடங்களில் வாகனம் நிறுத்த வேண்டும்.
7.மாற்றுத்திறனாளி மாணவருக்கு பாராட்டு
கிருஷ்ணகிரியில் இரண்டு கைகளை இழந்த மாற்றுத்திறனாளி மாணவன் பிளஸ் டூ தேர்வில் 471 மதிப்பெண் பெற்று அசத்தல் - முதலமைச்சர் உத்தரவு அடுத்து மாணவனை நேரில் சந்தித்து மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.
8.சிவாஜி சிலை திறப்பு
திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள 9 அடி உயரமுள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
9.புதிய துணை வேந்தரை தேர்வு செய்ய குழு
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை.க்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய தேடுதல் குழு அமைத்து அரசு உத்தரவு. ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அக்பர்அலி தலைமையில் மூவர் அடங்கிய குழு அமைப்பு.
10. 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று
பிளஸ் 2 மாணவர்கள் வரும் 12ஆம் தேதி முதல் மதிப்பெண் பட்டியலை பள்ளி வழியாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ பெறலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.
