டாப் 10 தமிழ் நியூஸ்: ‘யூடியூபர் திவ்யா மீது பாய்ந்த குண்டாஸ் முதல் வெளுத்து வாங்கப்போகும் கனமழை வரை’!
தமிழ்நாட்டு மக்களை நாகரிகமற்றவர்கள் எனப் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதிவு அவைக்குறிப்பிலிருந்து நீக்கம் முதல் வெளுத்து வாங்கப்போகும் மழை வரை டாப் 10 செய்திகளைப் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
தமிழர்களை பற்றிய மத்திய அமைச்சரின் சர்சைக்குரிய பேச்சு அவைக்குறிப்பிலிருந்து நீக்கம்:
நாடாளுமன்றத்தில் கல்வி தொடர்பான கேள்வி பதிலின்போது, தமிழ்நாட்டு மக்களை நாகரிகமற்றவர்கள் எனப் பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, தமிழக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அதன்பின், நேற்று தனது பேச்சை வாபஸ் பெற்றிருந்தார், தர்மேந்திர பிரதான். இந்நிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சு மக்களவையின் அவைக் குறிப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
பிரதானுக்கு எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்:
மன்னர் என எண்ணிக்கொண்டு மத்திய அமைச்சர் பிரதான் ஆணவத்துடன் பேசுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். பிரதானுக்கு நாவடக்கம் தேவை எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பணத்திற்காக மகன்களை விற்ற நபர் - ஆந்திர நபர் கைது:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ரூ.80,000 பணத்திற்காக 2 சிறுவர்களை வாத்து பண்ணையில் விற்ற தந்தை குறித்து, சைல்டு ஹெல்ப் லைனுக்கு வந்த தகவலை அடுத்து சிறுவர்களை அதிகாரிகள் மீட்டனர். சிறுவர்களை கொத்தடிமையாகப் பயன்படுத்திய ஆந்திராவைச் சேர்ந்த விஜயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலையைச் சேர்ந்த மணி என்பவர் தனது மகன்கள் இருவரையும் ரூ.80ஆயிரம் பெற்றுக்கொண்டு வாத்து பண்ணையில் வேலை செய்வதற்காக விற்றதாக காவல் துறை விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளார்.
சிறுத்தையைப் பிடித்த மக்கள் மற்றும் வனத்துறையினர்:
கோவை அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை, வலைகளை விரித்து சிறுத்தையை பொதுமக்களும் வனத்துறையினரும் பிடித்தனர். பின்னர், சிறுத்தையை வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
யூடியூபர் திவ்யா மீது பாய்ந்தது குண்டாஸ்:
குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட யூடியூபர் திவ்யா, கார்த்திக் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரி குண்டாஸ் வழக்கு பாய்ந்தது.
சினிமாவில் எந்த இடைவெளியும் இருக்காது என நடிகர் சிங்கம் புலி கருத்து:
யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து சினிமா நகர்ந்துகொண்டே இருக்கும் என்றும்; சினிமாவில் எந்த இடைவெளியும் இருக்காது என்றும்; ஒருவர் சென்றுவிட்டால் வேறு ஒருவர் வருவார், அதனால் எல்லோருக்கும் வாழ்த்துகள் என விஜய்யின் அரசியல் வருகை குறித்து இயக்குநரும் நடிகருமான சிங்கம் புலி பதில் அளித்துள்ளார்.
கன்னியாகுமரியில் படகு சேவை தற்காலிக நிறுத்தம்:
கன்னியாகுமரியில் கடல் சீற்றத்துடன் இருப்பதால் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கான படகு சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக ஆதரவு திரட்ட ஒடிசா செல்லும் திமுகவினர்:
தமிழக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, திமுக எம்.பி. தயாநிதி மாறன் ஆகியோர் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக ஆதரவு திரட்ட இன்று ஒடிசா செல்கின்றனர். அங்கு முன்னாள் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்திக்க இருக்கின்றனர்.
சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை:
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று காலை முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் சொன்ன வானிலை எச்சரிக்கை:
சென்னை முதல் வேலூர் வரை உள்ள பகுதிகளில் பிற்பகலில் இருந்து இரவு வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள்தமிழகம், கொங்கு பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும், தஞ்சை - திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள், நெல்லை, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்திருக்கிறார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்