TOP 10 NEWS: வேங்கைவயல் வழக்கு முதல் சென்னையில் இன்று டி20 கிரிக்கெட் வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: வேங்கைவயல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு கோரும் ரஞ்சித், சென்னையில் இன்று டி20 கிரிக்கெட் போட்டி, மெரினாவில் ஆமைகள் இறப்பு, கஞ்சா விற்றவர்கள் கைது உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தமிழ்நாட்டில் இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1. 7வது முறையாக திமுக ஆட்சி!
திமுக அரசின் திட்டங்களால் ஒவ்வொரு வீட்டில் ஒருவர் பயனடைந்து உள்ளனர். 7வது முறையாக வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
2.தமிழ்நாட்டின் கடன் 10 லட்சம் கோடியாகும்!
வரும் சட்டமன்றத் தேர்தலின்போது குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் 2500 ரூபாய் என திமுக வாக்குறுதி அளிக்கும். ஆட்சியில் இருந்து இறங்குவதற்குள் தமிழ்நாட்டின் கடனை ரூ.10 லட்சம் கோடியாக உருவாக்கிவிடுவார்கள் என ஈரோடு கிழக்கு தொகுதியில் பரப்புரையின்போது நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு.
3.வேங்கைவயல் வழக்கு - பா.ரஞ்சித் கோரிக்கை
வேங்கைவயல் விவகாரத்தில் யாரை காப்பாற்ற யாரை பலிகொடுப்பது? சிபிசிஐடி தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் 3 பேரும் தலித் தமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சிக்குரியது. அரசு வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் அல்லது சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என இயக்குநர் பா.ரஞ்சித் கோரிக்கை.
4.ஆமைகள் உயிரிழப்பு - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
திருவொற்றியூர், காசிமேடு, மெரினா கடற்கரைப் பகுதிகளில் ஆமைகளின் உயிர் இழப்புக்கு காரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தி உள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகுதான் ஆமைகள் உயிரிழப்புக்கான காரணம் தெரியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
5.சென்னையில் 2வது டி20 போட்டி
இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
6.மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டி20 போட்டியையொட்டி சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில்நிலையத்தில் இருந்து விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலையம் வரை செல்லும் கடைசி மெட்ரோ ரயில் இரவு 12 மணிக்கு புறப்பட உள்ளது.
7.4.5 கோடி போதை பொருட்கள் அழிப்பு!
66 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 4.5 கோடி ரூபாய் மதிப்பிலான 1400 கிலோ உலர் கஞ்சா, 74.150 கிலோ ஹசிஷ் ஆகிய போதை பொருட்கள் செங்கல்பட்டில் இயங்கி வரும் எரிக்கும் ஆலையில் தமிழ்நாடு போதைப் பொருள் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் எரித்தனர்.
8.மெத்தபெட்டமைன் விற்றவர்கள் கைது!
சென்னை வேளச்சேரியில் மெத்தபெட்டமைன் போதை பொருளை வெளிமாநிலத்தில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் இருந்து 5 கிராம் மெத்தபெட்டமைன், 36 கிராம் எம்.டி.எம்.ஏ போன்ற போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
9.டெலிகிராமில் கஞ்சா விற்றவர் கைது
சென்னையில் டெலிகிராம் செயலி மூலம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பள்ளி மாணவன் உட்பட 2 பேர் கைது. ஒன்றரை கிலோ கஞ்சா இவர்களிடம் இருந்து பறிமுதல்.
10.சீமானுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்
"உலகத் தமிழர்களின் இருபெரும் ஆளுமைகளான பெரியாரையும், பிரபாகரனையும் ஒருவருக்கெதிராக மற்றொருவரையும் நிறுத்த செய்யப்படும் முயற்சி குறுகிய அரசியல் ஆதாய நோக்கத்தோடு செய்யப்படுவதாகும். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிக்கை.
