TOP 10 NEWS: புதிய போராட்டம் அறிவித்த அண்ணாமலை முதல் திருவள்ளுவர் வாரம் வரை! டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: டிசம்பர் கடைசி வாரம் திருக்குறள் வாரமாக அறிவிப்பு, கண்ணாடி இழை பாலம் குறித்து ஈபிஎஸ் பேட்டி, புதிய போராட்டம் அறிவித்த அண்ணாமலை, இயல்பை விட அதிகம் பெய்த வடகிழக்கு பருவமழை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
தமிழ்நாட்டில் இன்று (டிசம்பர் 31) பிற்பகல் வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.புதிய போராட்டம் அறிவித்தார் அண்ணாமலை
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் வரும் ஜனவரி 3ஆம் தேதி மதுரை முதல் சென்னை வரை பேரணி நடைபெறும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
2. தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. நாளை முதல் ஜனவரி 6ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மிதமான மழைக்கும் வாய்ப்பு.
3. வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகம்
தமிழ்நாட்டில் நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 33 சதவிதம் அதிகம் பெய்து உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி முதல் தற்போது வரை 44 செ.மீ மழை பெய்ய வேண்டிய நிலையில் 59 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
4. டிசம்பர் கடைசி வாரம் திருக்குறள் வாரம்
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல புதியதாக 3 படகுகள் வாங்கப்படும். ஆண்டு தோறும் டிசம்பர் கடைசி வாரம் திருக்குறள் வாரமாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
5. பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்
பொங்கல் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்கள் வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் வீடுவீடாக விநியோகிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. ரேஷன் கடைகளில் ஜனவரி 9ஆம் தேதி முதல் தினசரி 200 பேருக்கு பொங்கல் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிப்பு.
6.சேலையூரில் ஒருவர் கொலை
தாம்பரம் சேலையூர் அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளி இளைஞர் சூர்யா கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
7. பாமகவுக்கு கிடைத்த வெற்றி
ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்ததை போல் மின் கொள்முதல் ஒப்பந்தத்தையும் ரத்து செய்ய வேண்டும். அதானிக்கு வழங்கப்படவிருந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது பாமகவுக்கு கிடைத்த வெற்றி என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
8. கண்ணாடி இழை பாலம் அதிமுகவின் திட்டம்
கன்னியாகுமரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ள கண்ணாடி இழை பாலம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம். எனது போரிக்கையை ஏற்றே சுற்று சூழல் அனுமதி மற்றும் தடையில்லா சான்று பெறப்பட்டது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி.
9. சென்னையில் சீமான் கைது
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்பாட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கைது.
10. ஜனவரி 16இல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை வரும் ஜனவரி 16ஆம் தேதி அன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்து உள்ளார்.