தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Today Is The Birthday Of Potti Sriramulu, Who Created A Language-wise State!

மொழிவாரி மாநிலம் உருவாக வித்திட்ட பொட்டி ஸ்ரீராமுலு பிறந்த தினம் இன்று!

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 16, 2023 07:01 AM IST

Andhra Pradesh: யார் இந்த பொட்டி ஸ்ரீராமலு!

பொட்டி ஸ்ரீராமுலு
பொட்டி ஸ்ரீராமுலு

ட்ரெண்டிங் செய்திகள்

யார் இந்த பொட்டி ஸ்ரீராமலு

சென்னையில் அண்ணாபிள்ளை தெருவில் வசித்து வந்த குருவய்யா மகாலட்சுமி அம்மா தம்பதியரின் மகனாக 16-3-1901 இல் பிறந்தார். தெலுங்கு ஆரிய வைஸ்சிய குலத்தில் பிறந்த பொட்டி ஸ்ரீராமுலு தன் 20 வயது வரை சென்னையில் படித்தார்.

காந்தியுடன் இணைந்த பயணம்

சத்தியம், அகிம்சை, தேசபக்தி ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஹரிஜன் முன்னேற்றத்தில் அதிக அக்கறை கொண்டவர். அது போல இவர் Great Indian Peninsular Railwayயில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு இவர் சுமார் நான்கு ஆண்டுகள் ரூ.250 மாதச் சம்பளத்தில் பணியாற்றினார். இவர் தனது 26ஆம் வயதில் 1927இல் மனைவியை இழந்தார். இதனால் உலக வாழ்க்கை மீதான வெறுப்பில் தன் சொத்துக்களை குடும்பத்தினருக்கு எழுதி வைத்து விட்டு மகாத்மாவின் சபர் மதி ஆசிரமத்தில் சேர்ந்து கொண்டார். 1930ல் உப்பு சத்தியாகிரத்தில் ஆர்வமுடன் பங்கேற்றார். பின் 1941ல் தனி நபர் சத்தியாகிரகத்திலும் இணைந்து கொண்டார். பின் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்போது பங்கேற்ற பொட்டி ஸ்ரீராமலு 3 முறை கைதானார்.

ஆலைய பிரவேச போராட்டம்

ஹரிஜன்களின் வாழ்வை முன்னேற்றும் நோக்கில் வாழ்நாள் முழுவதும் பணியாற்றினார்

1946 முதல் 1948 வரையிலான காலகட்டத்தில் இவர் நெல்லூர் ஜில்லாவில் ஹரிஜனங்களை ஆலயத்துக்குள் அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கையை வைத்து மூன்று முறை உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். நெல்லூரில் மூலப்பேட்டை என்னும் இடத்தில் உள்ள வேணுகோபாலசுவாமி ஆலயத்தில் ஹரிஜன ஆலய பிரவேசத்துக்காகப் போராடி வெற்றியும் பெற்றிருக்கிறார். ஹரிஜன மக்களின் முன்னேற்றம் தான் வாழ்க்கையின் குறிக்கோள் என்ற வாசகங்கள் அடங்கிய அட்டையை எப்போது அணிந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

மொழிவாரி மாநில போராட்டம்

ஆந்திரத்தின் கடலோரப் பகுதிகள், ராயலசீமா பிராந்தியங்கள் சென்னை மாகாணத்திலிருந்த நிலையில் சென்னையைத் தலைநகராகக் கொண்டு ஆந்திரத்தைத் தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று நெடுங்காலமாக போராடி வந்தனர். சென்னை மாகாணத்தில் தமிழ் பேசும் பகுதிகள் தவிர, ஆந்திரத்தின் பெரும் பகுதி, கன்னடம் பேசும் பெல்லாரி போன்ற பகுதிகள், கேரளத்தின் மலபார் பகுதிகள் இவைகளெல்லாம் சென்னை மாகாணத்திற்கு உட்பட்டிருந்தன.

தனி ஆந்திர மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி இவர் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினார். இவரது போராட்டத்தைக் கண்டு தனி மாநிலம் அமைக்கப்படும் என்று பிரதமர் ஜவஹர்லால் நேரு இவருக்கு ஒரு உறுதி மொழி அளித்தார். ஆனால் நீண்ட நாட்களாக நிறைவேற்ற பட வில்லை என்ற விரக்தியில் 1952 அக்டோபர் 19 அன்று சென்னை மகரிஷி புலுசு சாம்பமூர்த்தியின் இல்லத்தில் தனி ஆந்திரம் கோரி சாகும்வரை உண்ணாவிரதம் ஆரம்பித்தார். 58 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்த நிலையில் உயிரிழந்தார். போராட்டங்கள் வெடித்தன. 1953 அக்டோபர் 1-ல் ஆந்திரம் தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டது. அப்போது அதன் தலைநகர் கர்னூல். 1956 நவம்பர் 1-ல் ஹைதராபாத்தைத் தலைநகராகக் கொண்டு ஆந்திர பிரதேசம் உருவானது. மொழிவாரி மாநிலங்கள் உருவாவதற்கு வித்திட்ட மாநிலம் என்றும் இதைச் சொல்லலாம். ஆனால், தங்கள் பிராந்தியம் புறக்கணிக்கப்பட்டதாகச் சுட்டி, அதே ஆந்திரத்திலிருந்து தெலங்கானா பிரிந்தது முரண்பாடான சமகால வரலாறு.

ஆந்திர மாநிலம் உருவாக்க தொடர்ந்து போராடி தன் இன்னுயிரை நீத்த பொட்டி ஸ்ரீராமலு பிறந்த நாளில் அவரின் போராட்ட வரலாற்றை பகிர்ந்து கொள்வதில் ஹெச் டி தமிழ் மகிழ்ச்சியடைகிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்