குரூப் 4 தேர்வு தேதியை அறிவித்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம்! விண்ணப்பிக்க தயாராகுங்கள்!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அரசு பணிகளுக்கான இடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த வகையில் 2025 ஆம் ஆண்டிற்கான குரூப் தேர்வு வரும் ஜூலை மாதம் நடக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

நம்மில் பலருக்கு அரசு பணி வாங்கி விட வேண்டும் என்பது பெரும் கனவாக இருக்கும். அதிலும் பல தலைமுறைகளாக நமது குடும்பத்தில் யாரேனும் ஒருவர் அரசு வேலை வாங்கி விட வேண்டும் என இருப்பார்கள். அதற்கு காரணம் அரசு வேலையின் நிரந்தர தன்மையும், அதன் வாயிலாக பணியாளர்களுக்கு கிடைக்கும் பல வித வசதியும் அதன் மீதான ஈர்ப்பை அதிகரிக்கிறது. கடந்த ஒரு சகாப்தமாக தமிழ்நாடு மற்றும் மற்ற மாநிலங்களில் போட்டித் தேர்வுகளுக்கு தயராக்கி வருவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் தமிழ்நாடு அரசு சார்பில் பணியாற்றும் பணியாளர்களை டிஎன்பிஎஸ்சி தேர்ந்தெடுக்கிறது. பொதுப்பணித்துறை, பொறியியல் துறை உட்பட பல துறைகளுக்கு தேவையான ஆட்களை இதுவே போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) என்பது தமிழக அரசுப் பணிகளுக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்யும் ஒரு அரசு அமைப்பாகும். இது, தமிழக அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி, அரசுப் பணியிடங்களை நிரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஆணையம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 போன்ற பல்வேறு பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த வரிசையில் இந்த ஆண்டிற்கான குரூப் 4 தேர்வு தேதியை அறிவித்து உள்ளது.
இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி அடைபவர்கள் அரசு பணிகளில் பணியமர்த்தப்படுவார்கள். 2025 ஆம் ஆண்டு வரும் ஜூலை 12 ஆம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரை இந்த தேர்வு நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இந்த தேர்விற்கு இன்று(25/04/2025 ) முதல் மே மாதம் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குரூப் 4 தேர்வு வாயிலாக 3,935 பணியிடங்கள் நிரப்பபடும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2025 ஆம் ஆண்டு ஒரு பொன்னான வாய்ப்பு
வரும் 2026 ஆம் ஆண்டில் தேர்தல் வர இருப்பதால் இந்த ஆண்டு பல போட்டித் தேர்வுகள் நடக்கலாம் என தேர்வாளர்கள் எதிர்ப்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் தற்போது முதல் தேர்விற்கான அறிவிப்பு வந்து தேர்வாளர்களை மகிழ்ச்சி படுத்தியுள்ளது. அதிலும் இந்த 2025 ஆம் ஆண்டில் மேலும் பல தேர்வுகள் நடக்க உள்ளதாக டிஎன்பிஎஸ்சி இயக்குனர் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்