Weather Update: மக்களே எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை எங்கெங்கு கனமழை பெய்யக்கூடும்?.. வானிலை ஆய்வு மையம் அலர்ட்!
TN Weather Update: தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

TN Weather Update:தமிழகத்தில் பல இடங்களில் வெயில் வாட்டி வரும் நிலையில், அக்டோபர் மாதம் 2 அல்லது 3ஆவது வாரத்தில் இருந்து வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 8-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.