ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் - மூத்த அரசியல் தலைவர்கள் இரங்கல், கட்சி அலுவலகத்தில் அரைக்கம்பத்தில் பறந்த கொடி
தமிழ்நாட்டின் மூத்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் - மூத்த அரசியல் தலைவர்கள் இரங்கல், கட்சி அலுவலகத்தில் அரைக்கம்பத்தில் பறந்த கொடி, மற்றும் அது குறித்த விவரங்களைப் பார்ப்போம்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.-வும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75.
யார் இந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்?:
தந்தை பெரியாரின் சகோதரர் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் பேரன்தான், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆவார். இவர் சென்னை மாநில கல்லூரியில் படித்த காலத்தில் மாணவரணி காங்கிரஸ் செயலாளராக இருந்தார். அதனைத் தொடர்ந்து 1984-ல் சத்தியமங்கலம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார்.
2004 மக்களவைத்தேர்தலில் கோபி. மக்களவைத் தொகுதியில் வென்று, 2009 வரை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய இணையமைச்சராக செயலாற்றினார், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பதவி:
2000-02, 2014 - 16ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பதவி வகித்தார், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.
மகன் திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வென்று 2023ல் மீண்டும் எம்.எல்.ஏ. ஆனார், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
இந்நிலையில் உடல் நலக்குறைவால் நவ.11ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார்.
ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல், காலையில் தனியார் மருத்துவமனையில் இருந்து மணப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துவரப்பட்டு, அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மூத்த அரசியல் தலைவர்கள் இரங்கல்:
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது.
ஈவிகேஎஸ் இளங்கோவனின் மறைவு காங்கிரஸுக்கு பேரிழப்பு என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து சென்னையில் இருக்கும் காங்கிரஸ் கமிட்டியின் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அரைக்கம்பத்தில் காங்கிரஸ் கொடி பறக்கவிடப்பட்டது.
காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ் மறைவையொட்டி, இரங்கல் தெரிவித்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர்,’’காங்கிரஸ் கட்சியின் கம்பீரமான, பிரமாண்டமான குரலாக ஒலித்தவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.. தனிப்பட்ட முறையில் எனக்கும் பெரிய இழப்பு’’ என தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் இரங்கல்:
இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள குறிப்பில், ‘’தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் மறைவால் மிகுந்த வேதனை அடைகிறேன்.
அவரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் பேரியக்கத்தின் தோழர்களுக்கும், ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" என முதலமைச்சர் தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
விஜய் இரங்கல்:
இதுதொடர்பாக த.வெ.க தலைவர் விஜய் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘’ மிகப்பெரிய அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டவரும், தந்தை பெரியாரின் குடும்பத்தைச் சேர்ந்தவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் ஒன்றிய ஜவுளித்துறை இணை அமைச்சரும், தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்'’ எனத் தெரிவித்தார்.
மேலும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம், திருமாவளவன், திமுக பிரமுகர் டி.கே.எஸ்.இளங்கோவன் எனப் பல அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
டாபிக்ஸ்