TN Transport Jobs: அரசு போக்குவரத்து கழகங்களில் நேரடி பணி நியமனம்
அரசு போக்குவரத்து கழகம் சென்னை கழகத்தில் ஓட்டுநருடன் நடத்துநர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கழகத்தில் ஓட்டுநர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவது தொடர்பான ஆணை வெளியிடப்பட்டதாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ட்ரெண்டிங் செய்திகள்
தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இன்றியமையாத பொது போக்குவரத்து சேவைகளை நாள்தோறும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் வழங்கி வருகிறது.
அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களிலும் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 685 ஓட்டுநருடன் நடத்துநர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் லிமிடெட்டில் 122 ஓட்டுநர் பணியிடங்களும் நேரடி நியமனங்கள் மூலம், அதாவது வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் செய்தி தாள்களில் விளம்பரம் செய்து நிரப்பிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர், ஓட்டுநருடன் நடத்துநர் பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி, வயது மற்றும் பிற தகுதிகள் பெற்ற தகுதிவாய்ந்த நபர்களின் மூப்பு பட்டியல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வேலை வாய்ப்பு அலுவலகங்களிலிருந்து பெறப்படும்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், கும்பகோணம் மேலாண் இயக்குநர் ஓட்டுநர் பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி, வயது மற்றும் பிற தகுதிகள் பெற்ற தகுதி வாய்ந்த நபர்களின் மூப்பு பட்டியலை அந்த போக்குவரத்து கழக வட்டார எல்லைக்கு உட்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலிருந்து பெறப்படும்.
மேலும், ஓட்டுநருடன் நடத்துநர், ஓட்டுநர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் அந்தந்த போக்குவரத்து கழகங்களால் செய்திதாள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்படும். அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து தகுதி வாய்ந்த நபர்களை தெரிவு செய்வதற்காக அந்தந்த மேலாண் இயக்குநர்களால் குழு அமைக்கப்பட்டு அந்தக் குழு ஓட்டுநருடன் நடத்துநர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான நபர்களை சாலை போக்குவரத்து நிறுவனத்தின் உதவியுடன் தற்போதுள்ள அரசு விதிமுறைகளின்படி தேர்வு செய்வார்கள்.
இதன்மூலம் பொதுமக்களுக்கான பொது போக்குவரத்து சேவைகள் மேம்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்