RSS Rally Case:ஆர்எஸ்எஸ் பேரணி! உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல் முறையீடு
ஆர்எஸ்எஸ் பேரணி தமிழ்நாட்டில் நடத்துவதற்கு அனுமதி வழங்கிய சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள கோவை, நாகர்கோவில் உள்பட 50 முக்கிய நகரங்களில் ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பினர் காவல்துறையினரிடம் அனுமதி கேட்டனர். ஆனால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பேரணிக்கு அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த வழக்கில் கோவை, பல்லடம், நாகர்கோவில் உள்பட 6 இடங்களில் அணிவகுப்பு அனுமதி அளிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. அதேசமயம் 44 இடங்களில் சுற்று சுவருக்குள் அணிவகுப்பு நடத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்யநாரயண பிரசாத் அமர்வு கடும் கட்டுப்பாடுகளுடன் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளிக்குமாறு உத்தரவிட்டது.
இந்த உத்தரவில், பேரணி நடத்துவது தொடர்பாக மூன்று தேதிகளை குறிப்பிட்டு போலீசாரிடம் விண்ணப்பம் வழங்க வேண்டும் எனவும், அதில் ஒரு தேதியை தேர்வு செய்து போலீசார் அனுமதி வழங்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து பிப்ரவரி 12, 19, மார்ச் 5 ஆகிய தேதிகளில் ஒரு நாளில் பேரணி நடத்த அனுமதி வேண்டும் என கடந்த 11ஆம் தேதி போலீசாரிடம் ஆர்எஸ்எஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.
ஆர்எஸ்எஸ் தரப்பில் குறிப்பிட்ட இரண்டு தேதிகள் கடந்து விட்ட நிலையில், தற்போது வரை போலீசார் தரப்பில் அனுமதி வழங்காத நிலையில், தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு, ஆவடி காவல் ஆணையருக்கு நீதிமன்ற அவமதிப்பு எச்சரிக்கை நோட்டீஸ் ஆர்எஸ்எஸ் சார்பில் அனுப்பப்பட்டது. தாங்கள் குறிப்பட்ட தேதிகளில் எஞ்சியுள்ள தேதியான மார்ச் 5ஆம் தேதி பேரணிக்கு அனுமதி அளிக்காவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நேரும் என ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்தால் பொது அமைதிககு பாதிப்பு ஏற்படும் என தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாத கூறப்படுகிறது.
டாபிக்ஸ்