S.Ve.Shekher : ‘2026 தேர்தலுக்கு எஸ்.வி.சேகர் போதும்..’ முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!
‘மயிலாப்பூர் பகுதியில் இருக்கக்கூடிய தெருவிற்கு அவருடைய தந்தையாரின் பெயரை வைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். நிச்சயமாக, உறுதியாக அந்தப் பெயர் விரைவில் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு, அந்த பெயர் நிச்சயமாக விரைவில் சூட்டப்படும், சூட்டப்படும்..’

நடிகர் எஸ்.வி.சேகரின் நாடகப்பிரியா குழுவின் 50-ஆம் ஆண்டு விழா, நாடகப்பிரியா நிறுவனத் தலைவர் எஸ்.வி.வெங்கட்ராமனின் நூற்றாண்டு விழா மற்றும் நாடகப்பிரியாவின் 7000-ஆவது நாடக விழா ஆகிய இந்த மூன்று விழாக்களை இணைத்து முப்பெரும் விழாவாக சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், பேசியதாவது:
‘நாடகப்பிரியா அமைப்பின் நிறுவனத் தலைவர் எஸ்.வி.வெங்கட்ராமன் அவர்களின் நூற்றாண்டு விழா - எஸ்.வி.சேகரின் ஏழாயிரமாவது நாடக விழாவில் பங்கெடுத்து வாழ்த்துச் சொல்லக்கூடிய அல்லது சில நிமிடங்கள் உரையாற்றக்கூடிய வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன்! இந்த வாய்ப்பை எனக்கு உருவாக்கித் தந்திருக்கக்கூடிய நம்முடைய சேகர் அவர்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரும் பேசும்போது நம்முடைய முதல்வர், நம்முடைய முதல்வர் என்று சொன்னார். அதனால், நம்முடைய சேகர், நம்முடைய சேகர் என்று நானும் சொல்கிறேன்.
உத்தரவு போட்ட எஸ்.வி.சேகர்
நம்முடைய எஸ்.வி.சேகர் அவர்கள் ஓரிரு மாதங்களுக்கு முன்பு, என்னைப் பார்க்கவேண்டும் என்று என்னிடத்தில் தேதி கேட்டு, அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார்கள். அங்கே என்னிடத்தில் ஒரு கோரிக்கையை வைத்தார். கோரிக்கை என்று சொல்லமாட்டேன், ஒரு உத்தரவை என்னிடத்தில் வைத்தார். என்னவென்று கேட்டால், ‘இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தப் போகிறோம். ஏழாயிரமாவது நாடகத்தை உங்கள் தலைமையில் நடத்த முடிவு செய்திருக்கிறோம். என்னுடைய தந்தையாரின் நூற்றாண்டு விழாவை அந்த நிகழ்ச்சியில் நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கிறோம். என்னுடைய நாடகக் குழுவினர் அத்தனை பேருக்கும் நீங்கள் கேடயம் வழங்கிடவேண்டும். நீங்கள் வந்து பேசக்கூட வேண்டாம். 10 நிமிடம் நாடகத்தைப் பார்த்துவிட்டு, கேடயம், பரிசுகளை மாத்திரம் வழங்கிவிட்டு போனால் போதும்,’ என்றுதான் என்னிடத்தில் சொன்னார்.
நான் உடனே சொன்னேன், நான் முதலமைச்சரான பிறகு இது போன்ற நாடக விழாக்கள், தனிப்பட்ட முறையில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிக்கு நான் அதிகமாக போவதில்லை. அரசு நிகழ்ச்சி, கட்சி நிகழ்ச்சி இப்படிதான் நான் போகவேண்டிய சூழ்நிலை இருக்கிறது; அதற்கே நேரம் போதவில்லை. ஏனென்றால், ஒரு நிகழ்ச்சிக்கு போய்விட்டால், அடுத்த நிகழ்ச்சிக்கு அழைக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதை தவிர்க்க முடியாமல் போய்விடும் என்று நான் அவரிடத்தில் சொன்னபோது, இல்லை, இல்லை நீங்கள் கட்டாயமாக வந்துதான் தீரவேண்டும் என்று உத்தரவு போட்டார்.
நான் பங்கேற்றதில் ஆச்சரியமில்லை
அவர் உத்தரவை என்னால் மீறமுடியவில்லை. அதனால்தான் இன்றைக்கு இந்த நிகழ்ச்சிக்கு நான் மகிழ்ச்சியுடன் வந்திருக்கிறேன்; நன்றியோடு வந்திருக்கிறேன். ஏனென்றால், நம்முடைய எஸ்.வி.சேகர் அவர்கள் எங்கிருந்தாலும், எந்தக் கட்சியில் இருந்தாலும், இப்போது எந்தக் கட்சி என்று தெரியாது; நம்ம கட்சி; ஏனென்றால், தலைவர் சொல்வார், நான் என்றால் உதடு ஒட்டாது. நாம் என்றால் தான் உதடுகள் ஒட்டும். அதனால்தான் இன்றைக்கு நானும் இங்கு மகிழ்ச்சியோடு வந்திருக்கிறேன்.
நம்முடைய எஸ்.வி.சேகர் அவர்கள் தன்னுடைய தந்தையாரைப் போலவே, கலையுலகச் சேவை ஆற்றியவர், ஆற்றிக் கொண்டிருக்கக்கூடியவர். தொடர்ந்து ஆற்றப்போகிறவர். அதனால்தான், இன்றைக்கு அவரை வாழ்த்த நாமெல்லாம் இங்கே கூடியிருக்கிறோம்! எஸ்.வி.சேகர் விழாவில் இந்த மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதில் யாரும் ஆச்சரியப்பட வேண்டிய அவசியமில்லை. யாரும் வியப்படையவும் தேவையில்லை.
எஸ்.வி.சேகரை ஏன் கொண்டாடுகிறோம்
எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், எந்தக் கட்சியில் அவர் இருந்தாலும், துணிச்சலாக எதையும் எடுத்துச் சொல்லக்கூடிய, விமர்சனம் செய்யக்கூடிய ஆற்றல் அவருக்குண்டு. இப்போது கூட யாரை பற்றியெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். இந்த நாடகத்தில் சில காட்சிகளை பார்த்தோம். இதையெல்லாம் பார்க்கின்றபோது, 2026 தேர்தலுக்கு இவரை பயன்படுத்திக் கொண்டால் போதும். வேறும் ஒன்றும் தேவையில்லை.
எஸ்.வி.சேகர் எத்தனையோ பேரை பார்த்திருப்பார். எத்தனையோ போட்டிகளை சந்தித்திருப்பார். எத்தனையோ நெருக்கடிகளை சமாளித்திருப்பார். அத்தனையும் மீறி கலைப்பணி ஆற்றிய காரணத்தினால்தான் அவரை நாம் இன்றைக்கும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கும் எதைப் பற்றியும் கவலைப்படாமல், தான் சார்ந்திருக்கக்கூடிய கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், துணிச்சலோடு விமர்சனம் செய்கின்ற ஆற்றல் அவருக்குத்தான் உண்டு.
எஸ்.வி.சேகர் கோரிக்கை.. உடனே நிறைவேற்றம்
அதைத் தொடர்ந்து இன்றைக்கு சோசியல் மீடியாவில் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவர் பேசுகிறபோது கோரிக்கை ஒன்றை வைத்தார். அவர் தந்தை வாழ்ந்த மயிலாப்பூர் பகுதியில் இருக்கக்கூடிய தெருவிற்கு அவருடைய தந்தையாரின் பெயரை வைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். நிச்சயமாக, உறுதியாக அந்தப் பெயர் விரைவில் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு, அந்த பெயர் நிச்சயமாக விரைவில் சூட்டப்படும், சூட்டப்படும் என்று தெரிவித்து, நீங்கள் வைத்த கோரிக்கையை நான் நிறைவேற்றி இருக்கிறேன். நான் ஏற்கனவே வைத்த கோரிக்கையை நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டு விடைபெறுகிறேன்,’’
என்று அந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
