ஆப்ரேஷன் சிந்தூர்: மூர்வர்ணக் கொடி ஏந்தி முதலமைச்சர் ஸ்டாலின் பேரணி! இந்திய ராணுவ வீரர்களுக்கு ஆதரவு!
”காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகம் அருகே தொடங்கிய இப்பேரணி, போர் நினைவு சின்னம் வரை சுமார் 3.4 கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது. சுமார் 20,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்”

இந்திய ராணுவத்தின் வீரம், தியாகம் மற்றும் அர்ப்பணிப்பைப் போற்றும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை மெரினா காமராஜர் சாலையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றமான சூழலில், இந்திய ராணுவத்திற்கு தமிழ்நாட்டின் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் இப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.
பேரணியின் விவரங்கள்
காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகம் அருகே தொடங்கிய இப்பேரணி, போர் நினைவு சின்னம் வரை சுமார் 3.4 கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது. சுமார் 20,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்நிகழ்வில், முன்னாள் ராணுவ வீரர்கள், இந்தோ-பாகிஸ்தான் மற்றும் கார்கில் போரில் பங்கேற்றவர்கள், என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்கள், தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு கமாண்டோ படை, ஆயுதப்படை, அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். மூவர்ண தேசியக் கொடியை ஏந்திய பங்கேற்பாளர்கள், “இந்திய ராணுவத்துடன் துணை நிற்போம்” என்ற வாசகங்களுடன் உற்சாகமாக பேரணியில் அணிவகுத்துச் சென்றனர்.