"ஸ்டாலின் தான் முழு பொறுப்பு".. பாலியல் வன்கொடுமை வழக்கு FIR-ல் கசிந்த தகவல்கள்.. புது குண்டை தூக்கி போட்ட அண்ணாமலை!
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை வெளியே கசிந்துள்ளது தனிமனித உரிமைகளுக்கு எதிரானது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீஸார் கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நிலையில், 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று மாணவியின் பெயர் எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றும், அந்த எப்.ஐ.ஆர் இணையத்தில் வெளியானது என்றும் தகவல்கள் பரவியது.
இதற்கிடையில், குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதால், பாதிக்கப்பட்ட மாணவி குறித்த விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை வெளியே கசிய விட்டிருக்கிறார்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படைக் கடமையிலிருந்து தவறியிருக்கிறது திமுக. இது தனிமனித உரிமைகளுக்கு எதிரானது மட்டுமின்றி, சட்டவிரோதச் செயல்பாடும் ஆகும். இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால், பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்துப் போராட்டம் நடத்தச் சென்ற, முன்னாள் ஆளுநர் திருமதி. தமிழிசை சௌந்தராஜன், மாநிலத் துணைத் தலைவர் திரு. கருநாகராஜன், மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் சகோதர சகோதரிகளை, வலுக்கட்டாயமாகக் கைது செய்திருக்கிறது காவல்துறை.
குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதால், பாதிக்கப்பட்ட மாணவி குறித்த விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை வெளியே கசிய விட்டிருக்கிறார்கள். ஒரு பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படைக் கடமையிலிருந்து தவறியிருக்கிறது திமுக. இது தனிமனித உரிமைகளுக்கு எதிரானது மட்டுமின்றி, சட்டவிரோதச் செயல்பாடும் ஆகும். இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் முழு பொறுப்பு.
திமுகவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளியைப் பாதுகாக்க, இத்தனை கீழ்த்தரமான, மனசாட்சியற்ற செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் திமுக அரசையும், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் ஸ்டாலினையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாகத் தமிழகத்தை மாற்றியிருப்பதற்கு வெட்கப்படுங்கள் ஸ்டாலின். #ShameOnYouStalin" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்தும் மாணவிக்கு நீதி கேட்டும் வள்ளுவர் கோட்டம் பகுதியில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
டாபிக்ஸ்