சிறுவன் கடத்தல் வழக்கு.. ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட்! கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  சிறுவன் கடத்தல் வழக்கு.. ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட்! கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு

சிறுவன் கடத்தல் வழக்கு.. ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட்! கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Jun 17, 2025 12:16 PM IST

சிறுவன் கடத்தல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறை ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தன் மீதான கைது நடவடிக்கைக்கு எதிராக ஜெயராம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிறுவன் கடத்தல் வழக்கு.. ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட்! கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு
சிறுவன் கடத்தல் வழக்கு.. ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட்! கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு

இதையடுத்து தன்னை கைது செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து ஏடிஜிபி ஜெயராம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு வழக்கை நாளை பட்டியலிடப்பட்டு விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதிமன்ற வளாகத்தில் கைது

காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றத்தில் ஆஜரான புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்திக்கு நீதிபதி வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்தார். சீருடையில் நேரில் ஆஜரான ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயராம், நீதிபதி உத்தரவின் பேரில் உயர் நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஏடிஜிபிக்கு தொடர்பு இருப்பது கண்கூடாக தெரிந்தும், அவரது பெயரை எஃப்ஐஆரில் ஏன் சேர்க்கவில்லை. உயர் அதிகாரி என்பதால் காப்பாற்ற நினைக்கிறீர்களா. அவர் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது. எனவே, ஏடிஜிபி ஜெயராமை கைது செய்து, அவரிடம் போலீஸார் விசாரிக்க வேண்டும்.

அதேபோல், எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தியும் கூட்டத்தை கூட்டாமல் தனியாக போலீஸ் விசாரணைக்கு சென்று ஒத்துழைப்பு தரவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 26ம் தேதிக்கு தள்ளி வைப்பதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஏடிஜிபி ஜெயராம் உயர் நீதிமன்றத்தில் வைத்தே போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

சஸ்பெண்ட் உத்தரவு

இதன் பின்னர் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமனுடன், தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் அவசர ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர், ஏடிஜிபி ஜெயராமை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு பின் ஏடிஜிபி ஜெயராம் தரப்பில் உச்ச நீதிமன்றத்திடம் முறையிடப்பட்டுள்ளது.

நடந்தது என்ன?

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு களாம்பாக்கத்தை சேர்ந்தவர் லட்சுமி. இவரது மூத்த மகன் தனுஷும் (23), தேனி மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபரான வனராஜாவின் மகள் விஜஸ்ரீயும் (21) காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி சென்னையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.

இதை விரும்பாத வனராஜா, தனது மகளை மீட்க திட்டமிட்டார். காவல் உதவி ஆய்வாளராக இருந்த மகேஸ்வரி மூலமாக புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கேவி குப்பம் எம்எல்ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தியின் உதவியை நாடியுள்ளார்.

பின்னர், வனராஜா, அவரது உறவினர்கள், மகேஸ்வரி ஆகியோர் கடந்த ஜூன் 6ஆம் தேதி தனுஷ் வீட்டுக்கு சென்றனர். தம்பதிகள் அங்கு இல்லாததால், தனுஷின் தாயை மிரட்டிவிட்டு, அங்கிருந்த அவரது 17 வயது இளைய மகனை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

போலீஸில் தனுஷின் தாய் இதுகுறித்து புகார் கொடுத்த நிலையில், சிறுவனை கடத்தி சென்றவர்கள் அவனை மறுநாள் அதிகாலை சென்னை மீனம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். சிறுவன் கடத்தலுக்கு ஆயுதப்படை ஏடிஜிபியான ஜெயராம் காவல் வாகனம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

கடத்தல் சம்பவம் தொடர்பாக திருவாலங்காடு போலீஸார் வழக்கு பதிவு செய்து, தொழிலதிபர் வனராஜ், அவரது உறவினர்கள் மணிகண்டன், கணேசன், மகேஸ்வரி, பூந்தமல்லி துத்தம்பாக்கம் வழக்கறிஞர் சரத்குமார் ஆகிய 5 பேரை கடந்த 13ஆம் தேதி கைது செய்தனர். இதற்கிடையே ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமீன் தர மறுத்ததுடன், நேரில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது.

மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்

முன்னதாக, எம்எல்ஏ ஜெகன்மூர்த்தி முன் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், "உங்களை நம்பி 80 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர். நீங்கள் யார், என்ன செய்கிறீர்கள் என்றெல்லாம் அவர்களுக்கு தெரியட்டும் என்றுதான் ஆஜராக உத்தரவிட்டேன்.

ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் சம்பாதிக்கத்தான் மக்கள் உங்களை தேர்ந்தெடுத்தார்களா. இரண்டு பேர் காதல் திருமணம் செய்ததற்காக வீடு புகுந்து மிரட்டி, சிறுவனை கடத்துவீர்களா? சட்டம் இயற்றும் இடத்தில் உள்ள நீங்கள் சட்டத்தை மதித்து நடந்திருக்க வேண்டும். மாறாக, 2 ஆயிரம் பேரை நிறுத்தி போலீஸ் விசாரணைக்கு இடையூறு செய்துள்ளீர்கள். எம்.பி., எம்எல்ஏ, போலீஸ் அதிகாரிகள் யாராக இருந்தாலும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தால் நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது" என்று காட்டமாக கூறினார்.

ஏடிஜிபி ஜெயராம் பின்னணி

சிறுவனை கடத்தியதற்கு உதவியதாக கைதுக்குப் பின் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஏடிஜிபி ஜெயராம் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர். விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் எம்.ஏ., எம்.பில் படித்துள்ளார். 1996 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியாக தமிழக பிரிவில் பொறுப்பேற்றார்.

நாமக்கல், தருமபுரி, வேலூர் மாவட்டங்களில் ஆரம்பகால பணியை தொடங்கிய ஜெயராம், தமிழக காவல் துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். திறம்பட பணி செய்பவர், அனைவரிடமும் சகஜமாக, எளிமையாக பழகக்கூடியவர் என்று பெயரெடுத்த ஜெயராம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் ஓய்வு பெற உள்ளார். ஆனால் ஓய்வு பெறுவதற்கு ஒரு ஆண்டுக்கு முன் ஆள் கடத்தல் வழக்கில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.