தொடரும் இருட்டுக்கடை உரிமை சர்ச்சை! உயிலின் படி கடை தனக்கு சொந்தம் என உரிமை கோரும் நயன்சிங்!
இருட்டுக்கடை உரிமம் குறித்து எழுந்த சர்ச்சைகளை தொடர்ந்து தற்போது இருட்டுக்கடை ஓனரின் மற்றொரு வாரிசான நயன் சிங் உயிலின் படி இந்த கடை எனக்கு தான் சொந்தம் எனக் கூறி பகீர் கிளப்பியுள்ளார். மேலும் சகோதரி கவிதாவிற்கு கடையின் பெயரில் உரிமை இல்லை எனவும் கூறியுள்ளார்.

திருநெல்வேலியில் உள்ள புகழ்பெற்ற அல்வா கடையான இருட்டுக்கடை அல்வா மீது கடந்த சில நாட்களாகவே பெரும் சர்ச்சை எழுந்து வருகிறது. இருட்டுக்கடை அல்வா கடையை நடத்தி வரும் ஹரிசிங் மற்றும் கவிதா ஆகியோர் மகள் ஸ்ரீ கனிஷ்காவிற்கும் கோயம்புத்தூரை சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்து முடிந்தது. ஆனால் திருமணம் ஆன ஒரே மாதத்தில் இருட்டுக்கடை அல்வா கடையையும், ஒன்றரை கோடியையும் வரதட்சணையாக கேட்டு பல்ராம் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்துவதாக கவிதாவின் குடும்பத்தினர் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தனர்.
இந்த புகாரில் இணைக்கப்பட்டுள்ள பல்ராம் சிங் மற்றும் அவரது தந்தை யுவராஜ் சிங் ஆகியோர் இந்த குற்றச்சாட்டு பொய் என மறுப்பு தெரிவித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தனர். மேலும் இருட்டுக்கடையின் உரிமம் இவர்கள் பெயரிலேயே இல்லை எனவும், கடன் உள்ளது எனவும் கூறி இருந்தனர். இந்த நிலையில் மேலும் கனிஷ்கா இரவு நேரங்களில் பலருடன் போன் பேசுவது ஆகவும், நண்பர்களுடன் வெளியில் சுற்றுவதாகவும் அதனை குறித்து கேள்வி எழுப்பிய போது இவ்வாறு தங்கள் மீது குற்றச்சாட்டுகளை வைப்பதாக யுவராஜ் சிங் மற்றும் பல்ராம் சிங் ஆகியோர் குற்றம் சாட்டியிருந்தனர்.
ஆஜர் ஆக கால அவகாசம்
இந்த நிலையில் மீண்டும் கனிஷ்கா ஸ்ரீ அளித்த புகாரின் அடிப்படையில் பல்ராம் சிங்கை பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவருக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் ஆஜராகி அவகாசம் கேட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது இருட்டுக் கடை உரிமையாளர் யார் என்பது குறித்து செய்தியாளர்களில் இடம் பேசிய கவிதாவின் சகோதரர் நயன்சிங் பல தகவல்களை தெரிவித்துள்ளார்.
தற்போது கடையை நிர்வகித்து வரும் கவிதாவின் சகோதரர நயன்சிங் அளித்த பேட்டியில் ," 1999 ம் ஆண்டு பதிவு செய்யப்படாத உயில் மூலம் இருட்டுக்கடை உள்ளிட்ட சொத்துக்களுக்கு நானே வாரிசு. கடந்த 2000ம் ஆண்டு எனது மாமா பிஜிலி சிங் மற்றும் 2025ம் ஆண்டு அத்தை சுலோசனா பாய் ஆகியோர் உயிரிழந்த பிறகு உயில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
கவிதாவிற்கும் இருட்டுக்கடைக்கும் தொடர்பில்லை. கடை உரிமையாளர் சுலோசனா பாய் உயிருடன் இருக்கும் அவரை சந்திக்க சென்றேன். கவிதாவின் ஆட்கள் என்னை வீட்டினுள் விட வில்லை. இது தொடர்பாக திருநெல்வேலி டவுன் காவல் நிலையத்தில் அப்போதே புகார் அளித்துள்ளேன் சட்டப் போராட்டம் நடத்தி இருட்டு கடையை கைப்பற்றுவேன்" எனவும் பேட்டியளித்துள்ளார். மேலும் சகோதரி இருட்டுக்கடையை கைப்பற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டும் நயன் சிங் மருமகள் கனிஷ்கா மிகவும் நல்ல பெண் அவர் குறித்து கணவர் குடும்பத்தார் அவதூறாக பேசுகின்றனர் எனவும் தெரிவித்தார்.

டாபிக்ஸ்