புனித மோட்ச ராக்கினி மாதா ஆலய பெருவிழா - தேர் பவனியில் திரளானோர் பங்கேற்பு
விளாத்திகுளம் அருகே புனித மோட்ச ராக்கினி மாதா திருத்தேர் பவனியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வழிபட்டனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழ வைப்பார் கிராமத்தில் புனித மோட்ச ராக்கினி மாதா ஆலய பெருவிழா நடைபெற்றது.
ட்ரெண்டிங் செய்திகள்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழ வைப்பார் கிராமத்தில் 465 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித மோட்ச ராக்கினி மாதா ஆலயம் உள்ளது. இத்திருத்தலத்தில் அமைந்துள்ள மோட்ச ராக்கினி மாதா சிலை இத்தாலியில் இருந்து கடல் மார்க்கமாக வந்தடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த ஆலயத்தின் திருவிழாவானது கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் போது ஒவ்வொரு நாளும் திருப்பலிகள், சிறப்பு ஆராதனைகள், அன்னைக்கு உயர் வணக்கம் மற்றும் மறையுரை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் பவனி திங்கட்கிழமை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித மோட்ச ராக்கினி மாதா பவனி வந்தார். பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் உற்சாகத்துடன் திருத்தேரினை வடம்பிடித்து இழுத்தனர். இத்திருவிழாவில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். பின்னர், ஆலயத்தின் 465-வது பெருவிழாவை முன்னிட்டு அறுசுவை அசைவ விருந்து அனைவருக்கும் சிறப்பு அசன விருந்தாக வழங்கப்பட்டது.
டாபிக்ஸ்