’இந்திய ராணுவத்திற்கு எதிராக தவறான கருத்து பதிவிடுவதை ஏற்க முடியாது’ திருமாவளவன் திட்டவட்டம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’இந்திய ராணுவத்திற்கு எதிராக தவறான கருத்து பதிவிடுவதை ஏற்க முடியாது’ திருமாவளவன் திட்டவட்டம்!

’இந்திய ராணுவத்திற்கு எதிராக தவறான கருத்து பதிவிடுவதை ஏற்க முடியாது’ திருமாவளவன் திட்டவட்டம்!

Kathiravan V HT Tamil
Published May 10, 2025 04:16 PM IST

”இத்தகைய பதட்டமான சூழலில், விமர்சனம் என்ற பெயரில் எதிர்கருத்துகளை யாரும் பதிவு செய்யக் கூடாது. அப்படி பதிவு செய்திருந்தால் அது தவறு,”

’இந்திய ராணுவத்திற்கு எதிராக தவறான கருத்து பதிவிடுவதை ஏற்க முடியாது’ திருமாவளவன் திட்டவட்டம்!
’இந்திய ராணுவத்திற்கு எதிராக தவறான கருத்து பதிவிடுவதை ஏற்க முடியாது’ திருமாவளவன் திட்டவட்டம்!

இந்திய ராணுவத்தின் சமீபத்திய நடவடிக்கைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் முழுமையாக வரவேற்று ஆதரவு தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த நடவடிக்கையை அனைத்து ஜனநாயக சக்திகளும் ஆதரிக்க வேண்டும் என்று கூறினார். அதேவேளையில், இது இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போராக மாறிவிடக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார்.

ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு; பேரணியில் பங்கேற்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்திய ராணுவ நடவடிக்கையை ஆதரித்து சென்னையில் மாலை 5 மணிக்கு அறிவித்துள்ள பேரணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்க உள்ளதாக திருமாவளவன் தெரிவித்தார். ராணிப்பேட்டை மற்றும் வேலூர் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, இந்தப் பேரணியில் பங்கேற்க செல்லவிருப்பதாகவும் அவர் கூறினார். “பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த நடவடிக்கையை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். இது அனைத்து ஜனநாயக சக்திகளாலும் வரவேற்கப்பட வேண்டியது,” என்று அவர் வலியுறுத்தினார்.

போர் வேண்டாம் என வேண்டுகோள்

இந்த நடவடிக்கை இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான முழு அளவிலான போராக மாறிவிடக் கூடாது என்று திருமாவளவன் கவலை தெரிவித்தார். “எல்லா போர்களும் பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்க வேண்டும், ஆனால் அவை பேரழிவை ஏற்படுத்தக் கூடாது. இந்திய மக்கள் போரால் பாதிக்கப்படக் கூடாது,” என்று கூறினார்.

தவறான கருத்துகளுக்கு எதிர்ப்பு

இந்த அசாதாரண சூழலில், இந்திய ராணுவத்திற்கு எதிராகவோ அல்லது இந்திய ஒன்றிய அரசுக்கு எதிராகவோ தவறான கருத்துகளை பதிவிடுவது ஏற்கத்தக்கது அல்ல என்று திருமாவளவன் கூறினார். “இத்தகைய பதட்டமான சூழலில், விமர்சனம் என்ற பெயரில் எதிர்கருத்துகளை யாரும் பதிவு செய்யக் கூடாது. அப்படி பதிவு செய்திருந்தால் அது தவறு,” என்று அவர் வலியுறுத்தினார்.