‘பாஜக, அதிமுக மற்றும் தவெக 3 கட்சிக்கும் அதில் தான் போட்டி..’ திருமாவளவன் சொல்லும் புது கணக்கு!
Thirumavalavan: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பது நகைச்சுவையாக இருக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

பாஜக, அதிமுக மற்றும் தவெக ஆகிய மூன்று கட்சிகளுக்கிடையே தமிழகத்தில் இரண்டாவது கட்சி யார் என்பதில் தான் போட்டி நடந்துகொண்டிருக்கிறது. இந்தச்சூழலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பது நகைச்சுவையாக இருக்கிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று (ஏப்.1) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் 2026 ஆம் ஆண்டில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனது சமூக ஊடகங்களில் தொடர்ந்து பதிவு செய்து வருவது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “வட இந்தியாவில் ஏதாவது ஒரு மாநிலத்திலே வரும் என்ற எண்ணத்தில் அமித்ஷா சொல்லி இருப்பார். தமிழ்நாட்டில் அதற்கான வாய்ப்பே இல்லை என்பது அவருக்கே தெரியும்.
இன்னும் எதிர்க்கட்சிகள் தமிழ்நாட்டில் உறுதியான எந்த நிலைப்பாட்டையும் எடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. அதிமுகவும் இன்னும் ஒரு அணியை உருவாக்கவில்லை. பாஜகவும் இன்னும் ஒரு அணியை உருவாக்க முடியவில்லை. புதிதாக கட்சித் தொடங்கியிருக்கிற நடிகர் விஜய்யும் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்ததாக தெரியவில்லை.
அண்மையில் நடந்த தவெக முதல் பொதுக்குழு கூட்டத்தில் அவர் பேசியபோது, அதிமுக,பாஜக தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக இருக்க முடியாது. தவெக-தான் இரண்டாவது பெரிய கட்சி என்றே கூறியுள்ளார்.
எனவே, பாஜக, அதிமுக மற்றும் தவெக ஆகிய மூன்று கட்சிகளுக்கிடையே தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சி யார்? என்பதில் தான் போட்டி நடந்துகொண்டிருக்கிறது. இந்தச்சூழலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பது நகைச்சுவையாக இருக்கிறது" என்று திருமாவளவன் கூறினார்.

டாபிக்ஸ்