Thirumavalavan: தமிழ்நாட்டில் தலித் முதலமைச்சர்.. வலதுசாரி அரசியல் நாடகம் - திருமாவளவன் பதிலடி
Thirumavalavan Press Meet: ஆதி திராவிடர் ஒருவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வேண்டும் என்று ஆளுநர் ரவி பேசி கருத்துக்கு பதில் அளித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் இது வலதுசாரி அரசியல் நாடகம் என்று கூறியுள்ளார்.

சென்னை கோடம்பாக்கம் அம்பேத்கர் சமூக நலக் கூடத்தில் தோழர் எஸ்.நடராஜன் படத்திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் கலந்து கொண்டார். இந்த நிகழ்வின்போது எஸ். நடராஜனின் உருவப்படத்தை திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை திருமாவளவன் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "ஆளுநர் ரவி மீண்டும் மீண்டும் ஒரு அரசியல்வாதியாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். ஆளுநர் என்ற பொறுப்பை மறந்து, பேசுவதும், செயல்படுவதும் நீடிக்கிறது.
வலதுசாரி அரசியல் நாடகம்
தமிழ்நாட்டில் தலித் ஒருவர் முதலமைச்சர் ஆக வேண்டும் என ஆளுநர் பேசியது, தலித்தைகளை அபகரிக்கும் சூழ்ச்சி. தலித்துகளை பற்றி கரிசனமாக பேசுவது வலதுசாரி அரசியல் நாடகம்.
பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளராக சீமான் செயல்படுகிறாரோ? என்ற சந்தேகம் ஏற்படுகிறது. சீமான் செய்யும் அரசியல் அதிர்ச்சி அளிக்கிறது
தமிழர்களுக்கு எதிராக அரசியல் செய்யும் சீமான்
தமிழ் தேசியம் பேசும் சீமான் தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறார். ஈரோடு கிழக்கு தேர்தலில் பாஜகவின் ஆதரவாளர்கள் வாக்கை பெறுவதற்காக சீமான் அவதூறுகளை பரப்பி வருகிறார். தமிழ்நாட்டில் இப்போது பெரியாரை எதிர்க்க வேண்டிய விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன? என்று புரியவில்லை. பாஜக ஆதரவாளர்கள் வாக்குகளை பெற இந்த யுக்தியை கையாளுகிறாரா? என்று சந்தேகம் எழுகிறது.
தந்தை பெரியார் சனாதன எதிர்பில் உறுதியாக இருந்தார். இன்னும் குறிப்பாக பார்ப்பனர் ஆதிக்கத்தில் எதிர்ப்பாளராக இருந்தார். அவரின் சமகாலத்தில் அவரை வீழ்த்த பார்ப்பன உயர்சாதி அமைப்புகள் மிககடுமையாக அவரை விமர்சித்து வீழ்த்த முயற்சித்தார்கள். ஆனால் முடியவில்லை. சீமான் தமிழ் தேசியம் என்ற பெயரால் தமிழர்களுக்கு எதிரான அரசியல் ஏன் செய்கிறார் எனவும் கேள்வி எழுகிறது. இது அவருடைய எதிர்காலத்துக்கும் நல்லதல்ல என்பதை நான் மீண்டும் சுட்டிக் காட்டுகிறேன்."
இவ்வாறு திருமாவளவன் கூறினார்
ஆளுநர் ஆர்.என். ரவி கருத்து
சிதம்பரத்தில் நடைபெற்ற சுவாமி சகஜானந்தா அடிகளாரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என் ரவி, "சமூக நீதி, சமத்துவம் என்ற பெயரில் ஆதி திராவிட மக்களை ஒரு தீய சக்தி பிளவுபடுத்தி வைத்திருக்கிறது. ஆதி திராவிடர் ஒருவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வேண்டும்" என்றார். ஆளநரின் இந்த கருத்துக்கு திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் மேடையில் பேசிய திருமாவளவன், "வலதுசாரி இயக்கங்கள் இடதுசாரி இயக்கங்களை அழித்து ஒழிக்க நினைக்கின்றன. தேர்தல் நடைமுறை தான் பாஜக வளர காரணமாக உள்ளது. வலதுசாரி இயக்கங்கள் ஆட்சி அதிகாரத்தில் வலிமையோடு உள்ளன.
அம்பேத்கர், இடதுசாரி இயக்கங்களுக்கு எதிரானவர்கள்
இடதுசாரி மற்றும் அம்பேத்கர் இயக்கங்களுக்கு இடையே உள்ள இடைவெளியை குறைக்க முயற்சிக்கிறார்கள். போலி தமிழ் தேசியவாதிகள் பெரியாரை கொச்சைப்படுத்தி வருகிறார்கள். பெரியாருக்கு எதிராக பேசும் அனைவரும் அம்பேத்கர், இடதுசாரி இயக்கங்களுக்கு எதிரானவர்கள் தான். ஹெச்.ராஜா, அண்ணாமலை, குருமூர்த்தி ஆகியோர் பெரியார் எதிர்ப்பை ஆதரிக்க காரணம் என்ன? பெரியாரை ஏற்காதவர்கள் எல்டிடிஇ பிரபாகரனை வரவேற்றது உண்டா?
விசிக மீது விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. என்னை சுற்றி என்ன நடந்த விஷயம் எனக்கு மட்டுமே தெரியும், இந்த மண்ணில் சனாதனம் வேரூன்ற கூடாது என தொலைநோக்கு பார்வையோடு செயல்பட்டேன்" என்றார்

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்